பொய்யான பாலியல் புகார் கொடுத்தால் நடவடிக்கை: டெல்லி கோர்ட் எச்சரிக்கை
டெல்லி: பொய்யான பாலியல் புகார் அளிக்கும் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டெல்லி நீதிமன்றத்தில், டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் மீது, ஒரு பெண் பாலியல் புகார் அளித்தார். கூடுதல் செசன்ஸ் நீதிபதி வீரேந்திர பட் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில் அந்த புகார் போலியானது என்று தெரிந்ததும், போலியாக பாலியல் புகார் அளித்த பெண் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு டெல்லி நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும் நீதிமன்றம் தனது உத்தரவில், பொய்யான பாலியல் புகார் காரணமாக குற்றச்செயல் புள்ளி விவரங்கள் அதிகமாவதாக நீதிபதி தெரிவித்தார்.
பொய் புகாருக்கு ஆளான நபர், சமுதாயத்தில் பல்வேறு பிரச்னைக்கும், தொல்லைக்கும் ஆளாவதாகவும் கூறிய நீதிபதி,
அந்த நபரது குடும்பத்தினரும் பாதிக்கப்படுவதாக கூறியுள்ள நீதிமன்றம், நிரபராதியான அந்த நபர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலும், அவரது நேர்மை சந்தேகத்திற்கு ஆளாவதாக கூறினார்.
நிரபராதியாக அந்த நபரை விடுதலை செய்தாலும், பலரது சந்தேகப் பார்வையில் அவர் குற்றவாளியாகவே கருதப்படுகிறார். அந்த நபர் வாழ்நாள் முழுவதும் பாலியல் பலாத்கார குற்றவாளியாகவே கருதப்படுகிறார் என நீதிமன்றம் கூறியுள்ளது. ஆண்களுக்கும் கௌரவம் உண்டு என்றும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.
கடந்த 2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி மேற்கு டெல்லியில் உள்ள ஜெய் விகார் பகுதியில் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்ததாக அந்தப் பெண் புகார் அளித்தார்.
வேலை வாங்கித்தருவதாக கூறி தன்னை வரச்சொன்ன அந்த பிசினஸ் மேன், தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டதாகவும் தனது புகாரில் அவர் கூறியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம் இது பொய்யான புகார் என தெரியவரவே, நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது. மேலும், புகார் கொடுத்த பெண் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், தனது கடமையை செய்ய தவறியதாக நீதிமன்றம் கருதப்படும் எனவும் கூறியுள்ளது.