பஞ்சாப் காங். அக்கப் போர் இப்போதைக்கு ஓய்ந்தது! டீ பார்ட்டியில் ராசியான சித்து- அமரீந்தர் சிங்!
சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக நீடித்து வந்த உட்கட்சி பூசல் இன்று தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட நவ்ஜோத்சிங் சித்துவும் அவரை கடுமையாக எதிர்த்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் டீ பார்ட்டி மூலம் கை கோர்த்துள்ளனர்.
பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கிறது. பஞ்சாப் சட்டசபை தேர்தலில் டெல்லி விவசாயிகள் போராட்டம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உள்ளது.
தமிழ்நாட்டில் மேலும் 1,872 பேருக்கு கொரோனா.. இந்த 5 மாவட்டங்களில் மட்டும் பாதிப்பு அதிகம்!
டெல்லி விவசாயிகள் போராட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தில் பாஜகவுக்கு மிக கடுமையான எதிர்ப்பு உள்ளது. அதனால்தான் கூட்டணியில் இருந்தும் மத்திய அமைச்சரவையில் இருந்தும் சிரோமணி அகாலி தளம் வெளியேறியது. பஞ்சாப் மாநில தேர்தல் களத்தில் காங்கிரஸ் கட்சிக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது
பஞ்சாப் காங். உட்கட்சி பூசல்
ஆனால் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் உட்கட்சி பூசல்தான் மிகப் பெரிய எதிரி. பஞ்சாப் முதல்வர் அமரீந்தர்சிங்குக்கு எதிராக மாஜி கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சிங்கும் அவரது ஆதரவாளர்களும் போர்க்கொடி தூக்கினர். இதனையடுத்து சித்துவை சமாதானப்படுத்த அவருக்கு மாநில காங்கிரஸ் தலைவர் பதவி கொடுக்க சோனியா காந்தி குடும்பம் முடிவு செய்தது. அத்துடன் சித்துவை துணை முதல்வராக்கவும் சோனியா காந்தி குடும்பம் விரும்பியது. ஆனால் முதல்வர் அமரீந்தர்சிங் சித்துவுக்கு முக்கியத்துவம் தருவதை துளியும் விரும்பவில்லை.
முடிந்த பஞ்சாயத்து
தன் தலைமையிலேயே பஞ்சாப் சட்டசபை தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்ளட்டும் என பிடிவாதமாக இருந்தார். இது தொடர்பாக டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருடன் சித்துவும் அமரீந்தர்சிங்கும் பல முறை பேச்சுவார்த்தை நடத்தினர். ஒருவழியாக பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக சித்து நியமிக்கப்பட்டார். அவருக்கு 56 எம்.எல்.ஏக்கள் நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.
சித்துவின் அழைப்பு
இந்த நிலையில் மாநில காங்கிரஸ் தலைவராக தாம் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க வேண்டும் என்று முதல்வர் அமரீந்தர்சிங்குக்கு சித்து கடிதம் எழுதினார். அதேபோல் சித்து ஆதரவு 56 எம்.எல்.ஏக்களும் அமரீந்தர்சிங்குக்கு கடிதத்தை அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சித்து பதவியேற்பு விழாவில் பங்கேற்க அமரீந்தர்சிங் ஒப்புக் கொண்டார்.
அமரீந்தர்சிங் டீ பார்ட்டி
முன்னதாக டீ பார்ட்டி ஒன்றுக்கும் அமரீந்தர்சிங் ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சியில் அமரீந்தர்சிங்கை பார்த்து கை கூப்பி வணக்கம் செலுத்திய சித்து, ஹை யூ சார்.. ஸ்யூர் ப்ளசர் என உரத்த குரலில் கூறினார். பின்னர் அமரீந்தர்சிங்கும் சித்துவும் அருகருகே அமர்ந்து டீ குடித்தனர். இதனைத் தொடர்ந்து சித்து பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இருவரும் என்ன பேசினர்?
இந்த நிகழ்ச்சியில் சித்துவும் அமரீந்தர்சிங்கும் அருகருகே அமர்ந்து இருந்தனர். இதில் பேசிய அமரீந்தர்சிங், சித்து குடும்பத்துக்கும் தமது குடும்பத்துக்குமான நீண்டகால உறவை பற்றி விவரித்தார். ஆனால் சித்து பேசும்போது, அமரீந்தர் சிங்குக்கும் தமக்குமான பிரச்சனை இருக்கிறது. இருப்பினும் பஞ்சாப் மக்கள்தான் எங்கள் இருவருக்கும் முக்கியம் என சுட்டிக்காட்டினார். பொதுவாக டீ பார்ட்டியிலும், பதவியேற்பு விழாவில் இருவரும் இணைந்து பங்கேற்றதால் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் நீடித்த உட்கட்சி பூசல் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிகிறது.
வெடிக்க காத்திருக்கும் பூசல்?
ஆனால் இந்த இரு நிகழ்ச்சியிலும் சித்துவிடம் இருந்த உற்சாகம் அமரீந்தர்சிங்கிடம் இல்லை; ஒருவிதமாக இறுக்கத்துடனேயே அமரீந்தர்சிங் காணப்பட்டார். இதனால் சித்து- அமரீந்தர்சிங் அக்கப்போர் இப்போதைக்கு ஓய்ந்திருக்கிறது என்றுதான் சொல்ல முடியும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.