பஞ்சாப் அரசில் உச்சகட்ட மோதல்.. உள்ளாட்சி துறையை பறித்த முதல்வர்.. விடமாட்டேன்.. சித்து ஆவேசம்
சண்டிகர்: பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் அமைச்சர் நவ்ஜோத் சிங் சித்து நடுவேயான மோதல் அதிகரித்து உள்ளது.
சித்துவிடம் இருந்த உள்ளாட்சி அமைச்சக பொறுப்பை முதல்வர் பறித்துக் கொண்டு உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் அம்ரிந்தர் சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. நடைபெற்று முடிந்த லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 13 தொகுதிகளில் 8 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றிபெற்றது.
பஞ்சாபில் போதிய அளவுக்கு காங்கிரஸ் சிறப்பாக செயல்படாததற்கு, நவ்ஜோத் சிங் சித்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவியேற்பு விழாவில் பங்கேற்க சென்று, அந்த நாட்டு ராணுவ தளபதியை கட்டியணைத்தது உள்ளிட்ட சில சம்பவங்கள் தான் காரணமாக அமைந்து விட்டது என்று முதல்வர் அமரீந்தர் சிங் பகிரங்கமாக குற்றம் சாட்டி இருந்தார். ஆனால் சித்து இதை மறுத்தார்.
காங்கிரஸ் கட்சிக்கு போதாத காலம் போல.. தெலுங்கானாவில் கூண்டோடு கட்சித்தாவும் காங். எம்எல்ஏக்கள்
இந்த நிலையில் முதல்வர் தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தை, நவ்ஜோத் சிங் சித்து புறக்கணித்துவிட்டார். அதற்கு பதிலாக, செய்தியாளர்களை சந்தித்த அவர், சில புள்ளி விபரங்களை வெளியிட்டு நகர்ப்புறங்களில் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டுள்ளதாக பேட்டியளித்தார்.
முதல்வர் தன்னை பற்றி அவதூறாக கருத்துக்களை தெரிவிப்பதாகவும், ஆனால் தேர்தல் முடிவுகள் தனது சிறப்பான பணியை எடுத்துக்காட்டுவதாக உள்ளதாகவும் தெரிவித்தார் சித்து.
இந்த நிலையில் அமரீந்தர் சிங்கின், அடுத்த கட்ட நடவடிக்கையாக நவ்ஜோத் சிங் சித்துவிடம் இருந்த, முக்கியமான, உள்ளாட்சி துறை பொறுப்பை பிடுங்கிக் கொண்டு உள்ளார். அதேநேரம், சுற்றுலாத்துறை இன்னமும் சித்து வசம்தான் உள்ளது. அந்தத் துறையை தன்வசம் வைத்துக் கொள்வதாக முதல்வர் அமரீந்தர் சிங், ஆளுநருக்கு இன்று, வழங்கியுள்ள பரிந்துரையில் தெரிவித்துள்ளார்.
இந்த முடிவுக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நவ்ஜோத் சிங் சித்து, இந்த விவகாரத்தை சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை.. பஞ்சாப் மக்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருக்கிறேன், என்று காட்டமாக தெரிவித்தார் .
இவ்வாறு முதல்வருக்கும், அமைச்சர் சித்துவிற்கும் கடுமையான மோதல் போக்கு உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. முன்னதாக நிருபர்களிடம் பேசிய சித்து மனைவி நவ்ஜோத் கவுர், அமைச்சரவை கூட்டத்திற்கு நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, அழைப்பு வரவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார்.
பாஜகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு வந்த நவ்ஜோத் சிங் சித்துவிற்கு, காங்கிரஸ் தேசிய தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருடன் நல்ல தொடர்பு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.