ஈராக்கில் கடத்தப்பட்ட இந்தியர்களை மீட்க பணயத்தொகை தர தயார்... பஞ்சாப் முதல்வர் பாதல் அறிவிப்பு
டெல்லி: ஈராக்கில் கடத்தப்பட்டுள்ள இந்தியர்களை மீட்க பணயத்தொகை கொடுக்க தயார் என பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் அறிவித்துள்ளார்.
ஈராக்கில் சன்னி மற்றும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு இடையே உருவான மதக்கலவரம் தற்போது உள்நாட்டு போராக மாறியுள்ளது. ஷியா அரசுக்கு எதிராக சதாம் ஆதரவுப் படையான சன்னி பிரிவினரின் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
ஏற்கனவே அவர்கள் மொசூல், கிர்குக், திக்ரித், சாதியா, ரமாடி சமர்ரா, ஜலாலா உள்ளிட்ட பல நகரங்களை கைப்பற்றி தங்கள் பிடியில் வைத்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தை கைப்பற்றுவதில் தீவிர முனைப்பாக உள்ளனர்.
இந்நிலையில், மொசூல் நகரில் வேலை செய்து வந்த இந்திய கட்டிடத் தொழிலாளர்கள் 40 பேர் கடந்த 10ம் தேதி கடத்தப் பட்டனர். அவர்கள் எங்கே வைக்கப்பட்டுள்ளனர், அவர்களது கதி என்ன என்பது குறித்து தகவல் ஏதும் இல்லை. இதனால் அவர்களது குடும்பத்தினர் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்தியர்கள் கடத்தப்பட்டதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
கடத்தப்பட்டவர்கள் பெரும்பாலான தொழிலாளர்கள் பஞ்சாப் மற்றும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள். ஈராக்கில் கடத்தப்பட்டுள்ள இந்திய தொழிலாளர்கள் 40 பேரை மீட்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியுள்ளது.
இதற்கிடையே கடத்தப்பட்ட 40 இந்தியர்களில் 39 பேர் கொல்லப் பட்டு விட்டதாக ஊடகங்களில் அதிர்ச்சித் தகவல் வெளியானது. ஆனால், இத்தகவலை மத்திய அரசு இன்னமும் உறுதி செய்யவில்லை.
இந்நிலையில் ஈராக்கில் கடத்தப்பட்டுள்ள இந்தியர்களை மீட்க பணம் உட்பட எதையும் கொடுக்க தயார் எனத் தெரிவித்துள்ளார் பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல். மேலும் இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்தியர்களை மீட்க அரசு தேவையான அனைத்து பணிகளையும் செய்யும், அவர்களது நிலைபாடு தெரியவில்லை. ஈராக்கில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க பணயத்தொகை அல்லது அவர்கள் வேறு எதையாவது கேட்டால் கொடுக்கத் தயார் என்றார்.