நான் பேங்க் மேனேஜர் பேசறேன்.. கொஞ்சம் ஏடிஎம் டீடெய்ல்ஸ் தாங்க.. "கேப்டன்" மனைவியிடம் 23 லட்சம் அபேஸ்
அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலத்தின் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மனைவியிடம் செல்போன் மூலம் 23 லட்சம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது மனைவி பிரனீத் கவுர், பாட்டியாலா தொகுதியின் எம்பியாக உள்ளார். நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்பதற்காக சில நாட்களுக்கு முன்னர் டெல்லியில் இருந்தார்.
அப்போது வங்கி மேலாளர் என கூறி ஒருவர் இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டுள்ளார். கவுரின் ஊதியத்தை செலுத்துவதற்காக வங்கிக் கணக்கு, ஏடிஎம் கார்டு எண், சிவிசி எண், ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (ஓடிபி) ஆகிய விவரங்களை சொல்லுமாறு மர்ம நபர் கேட்டார்.
எஸ்எம்எஸ்
இந்த நபரை நம்பிய கவுர், எல்லா விவரங்களையும் கூறிவிட்டார். இதையடுத்து அவர் போனை துண்டித்த சில நிமிடங்களில் கவுரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ 23 லட்சம் துண்டிக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
ஜார்க்கண்ட் நபர்
உடனே பஞ்சாப் போலீஸாரிடம் புகார் அளித்தார். இதையடுத்து செல்போன் எண்ணை ஆய்வு செய்த போலீஸார், அந்த மோசடி நபர் ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை கைது செய்தனர்.
முதல்வர் மனைவியிடம் கைவரிசை
பொதுமக்கள், அப்பாவி மக்கள், விவரம் அறியாதவர்கள் என தேடி பிடித்து போன் செய்து விவரங்களை பெற்று வந்த மோசடி கும்பல் தற்போது பஞ்சாப் முதல்வரின் மனைவியிடமே கைவரிசை காட்டியுள்ளது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சட்டம் ஒழுங்கு
முதல்வரின் மனைவி, எம்பியாக உள்ள கவுர் இப்படி கவனக்குறைவாக இருக்கலாமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. மேலும் சட்டம் ஒழுங்கு குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.