அமரீந்தர் சிங்குக்கு இன்று பிறந்த நாள்.. "கிப்ட்டாக" கிடைக்குமா ஆட்சி?
பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் அமரீந்தர் சிங், இன்று 75 வது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில் அவருக்குப் பிறந்த நாள் பரிசாக, தேர்தல் வெற்றி அமையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவரும் முன்னாள் முதல்வருமாகிய அமரீந்தர் சிங்குக்கு, இன்று 75 வயதாகிறது. அவருடைய 75ஆவது பிறந்தநாள் பரிசாக பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகள் காங்கிரஸுக்கு சாதகமாக அமையுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பஞ்சாப் மாநில தேர்தல் முடிவுகள் இன்னும் சற்றுநேரத்தில் வெளியாக உள்ள நிலையில், அமரீந்ர் சிங்குக்கு, இந்த பிறந்தநாள் வாழ்நாளில் மறக்கமுடியாத, வெற்றியைக் கொடுக்கும் நாளாக அமையுமா? அமரீந்தர் சிங், இதுதான் தான் பங்கேற்கும் இறுதித் தேர்தலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
கடந்த பத்தாண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸ், இந்த முறை ஆட்சியைக் கைப்பற்றுமா என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.
காங்கிரஸ் வெற்றிபெற்றால், அதை பிரமாண்டமாகக் கொண்டாட அமரீந்தர் சிங்கிடம் இரண்டு காரணங்கள் இருக்கின்றன. ஒன்று அவருக்கு இன்று 75 ஆவது பிறந்தநாள். இரண்டு, குஷ்வந்த் சிங், அமரீந்தர் சிங்கைப் பற்றிய வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிடுகிறார்கள். 'மக்களின் மஹாராஜா' என்ற அந்த நூல் வெளியீடு, தேர்தல் வெற்றியின் ஒருபகுதியாக இருக்கும்.
அமரீந்தர் சிங் இந்த மாத ஆரம்பத்தில் நடைபெற்ற தன் பேரன் நிவான் சிங்கின் திருமணத்தில் கலந்துகொண்டார். தன் பேரனுக்கு, காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங்கின் பேத்தி, மிரிங்கா சிங்கைத் திருமணம் செய்து வைத்தார்.
அமரீந்தர் சிங், இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார். தற்போதைய முதல்வர் பிரகாஷ் சிங் பாதலை எதிர்த்து லம்பி தொகுதியிலும், ஜெ.ஜெ சிங்கை எதிர்த்து பாட்டியலா தொகுதியிலும் போட்டியிடுகிறார்.