பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்த 'கை'.. ஆம் ஆத்மி எதிர்கட்சி - பாஜகவிற்கு வெறும் 3 சீட்
பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றிக்கனியை பறித்துள்ளது. ஆம் ஆத்மி கட்சி எதிர்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. பாஜக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான முடிவுகள் இன்று வெளியானது. இதில் காங்கிரஸ் கட்சி 77 இடங்களைப் பிடித்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வென்று இரண்டாம் இடத்தை பிடித்து எதிர்கட்சி அந்தஸ்த்தை பெற்றுள்ளது. ஆளும் சிரோமணி அகாலிதளம் படு பயங்கர தோல்வியுடன் 3வது இடத்திற்கு விரட்டப்பட்டுள்ளது. இதில் பாஜக 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
117 உறுப்பினர்களைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சிரோமணி அகாலிதளம் 94 தொகுதிகளிலும் அதன் கூட்டணி கட்சியான பாஜக 23 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது. ஆளும் கட்சி மீது மக்களுக்கு இருந்த கோபம் இந்த தேர்தலில் எதிரொலித்தது. சிரோமணி அகாலிதளம் கூட்டணி மரணஅடி வாங்கியதோடு 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இது எதிர்பார்த்த தோல்விதான்.
காங்கிரஸ் கட்சி
எதிர்கட்சியாக உள்ள காங்கிரஸ் 117 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தி உள்ளன. காங்கிரஸ் கட்சியின் முதல்வர் வேட்பாளர் அம்ரிந்தர் சிங் தலைமையில் தேர்தலை சந்தித்து உள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலை வகித்தது. நேரம் செல்லச்செல்ல வெற்றி உறுதியானது.
படுபயங்கர வெற்றி
77 இடங்களில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி 10 ஆண்டுகளுக்குப் பிறகு பஞ்சாபில் ஆட்சியைப் பிடிக்கிறது. முதல்வர் வேட்பாளர் அம்ரிந்தர் சிங்கிற்கு இது பிறந்தநாள் பரிசாக கிடைத்துள்ளது. இந்த வெற்றியை காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றன.
ஆம் ஆத்மி கட்சி
பஞ்சாப் சட்டசபை தேர்தலில் முதல்முறையாக களம் காணும் ஆம் ஆத்மி 112 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளது. இந்த கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரண்டாம் இடத்தை மட்டுமே பிடித்து எதிர்கட்சி வரிசையில் அமர உள்ளது.
சிரோமணி அகாலிதளம் - பாஜக
பஞ்சாபை ஆளும் சிரோமணி அகாலிதளம் பாஜக கூட்டணி 18 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கருத்துக்கணிப்புகள் அனைத்தும் ஆளும் கூட்டணி கட்சிகள் படுதோல்வியை சந்திக்கும் என்று கூறப்பட்டது சொன்னது போலவே ஆளுங்கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. பாஜகவிற்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்தன.
வெற்றிக்கனி
மும்முனை போட்டி நிலவிய பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய வெற்றியுடன் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதால் அந்த கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். முதல்வர் வேட்பாளர் அம்ரிந்தர் சிங்கிற்கு மிகப்பெரிய பிறந்தநாள் பரிசை கொடுத்துள்ளனர்.