பஞ்சாபில் பயங்கரம்... முன்விரோதம் காரணமாக 5 மாணவிகள் மீது ஆசிட் வீசிய 8ம் வகுப்பு மாணவர்
சண்டிகர்: பஞ்சாபில் முன்விரோதம் காரணமாக 8-ம் வகுப்பு மாணவன் தனது நண்பரோடு சேர்ந்து, தனது வகுப்பில் படிக்கும் 5 மாணவிகள் மீது ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில், 8-ம் வகுப்பு மாணவன் சாஜன். இவர், தனது வகுப்பில் படிக்கும் பிராபி ஜோத் கவுர் (14) என்ற மாணவியிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்ததாகத் தெரிகிறது.
இது தொடர்பாக ஜோத் கவுர் தனது பெற்றோரிடம் புகார் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து ஜோத் கவுரின் பெற்றோர் பள்ளி நிர்வாகத்திடம் இது குறித்து முறையிட்டுள்ளனர். இதனால், பள்ளியில் இருந்து சாஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனால் ஜோத் கவுர் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார் சாஜன். எனவே, ஜோத் கவுரைப் பழிவாங்க அவர் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி, நேற்று மாலை பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த ஜோத் கவுர் மீது, இருசக்கர வாகனத்தில் வந்த சாஜன் ஆசிட் வீசியுள்ளார். இதில், ஜோத் கவுர் பலத்த காயமடைந்தார். இந்த சம்பவத்தின் போது, ஜோத் கவுர் உடன் சென்ற மேலும் 4 மாணவிகளுக்கும் காயம் ஏற்பட்டது.
உடனடியாக காயமடைந்த ஐந்து மாணவிகளையும் பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் ஜோத் கவுரின் நிலைமை மட்டும் சற்று மோசமாக உள்ளதாகத் தெரிகிறது. மற்ற மாணவிகளுக்கு சிறிய தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், உயிருக்கு ஆபத்தில்லை என்றும் மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சாஜனையும், அவருக்கு உதவிய நண்பரையும் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதற்கிடையே, பஞ்சாப் மாநில கல்வி அமைச்சர் டல்ஜித் சிங், பாதிக்கப்பட்ட மாணவியின் சிகிச்சைக்காக உடனடியாக ரூ. 50 ஆயிரம் தர உத்தரவிட்டுள்ளார். மேலும், அம்மாவட்ட கல்வி அதிகாரி நேரடியாகச் சென்று மாணவியின் நிலைமைக் குறித்து அறிக்கை தாக்கல் செய்யும் படியும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
அதோடு, ஜோத் கவுர் சிகிச்சைப் பெற்று வரும் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களை போனில் தொடர்பு கொண்டு மாணவியின் உடல்நிலைக் குறித்து நலம் விசாரித்தார் டல்ஜித். மேலும், ஜோத் கவுரின் பெற்றோருடன் போனில் பேசிய அமைச்சர், இந்த விவகாரத்தில் விரைவில் விசாரணை முடிந்து குற்றவாளிக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என்றும், மாணவிக்கு தேவையான உதவிகளை அரசு மேற்கொள்ளும் என்றும் உறுதியளித்தார்.
பழி வாங்கும் நடவடிக்கையாக சக தோழிகள் மீது ஆசிட் வீசும் அளவிற்கு வன்முறை சிந்தனை 8-ம் வகுப்பு மாணவனிடம் காணப்பட்டது பஞ்சாப் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.