தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய பஞ்சாப் அமைச்சர்... தன் மேல் தவறில்லை என மறுப்பு
அமிர்தசரஸ் : சுதந்திர தினத்தை முன்னிட்டு கொடியேற்றும் நிகழ்ச்சியின்போது, பஞ்சாப் மாநில அமைச்சர் பிக்ராம் சிங் மஜித்தியா கொடியை தலைகீழாக ஏற்றி அதற்கு மற்றும் காவல் துறை அதிகாரிகளும் வணக்கம் செலுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குரு நானக் ஆடிட்டோரியத்தில் சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் அமைச்சர் பிக்ராம் சிங் மஜீத்தியா, காவல் ஆணையர் ஜதீந்தர் சிங் ஆலக், காவல் துணை ஆணையர் ரவி பகத் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் மஜீத்தியா தேசியக் கொடியை ஏற்றிய போது, அது தலைகீழாக பறந்தது. எனினும், மூவரும், தலைகீழாக பறந்த கொடிக்கு வணக்கம் செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் மஜீத்தியா உரையாற்றிக் கொண்டிருக்கும் போது கூட தேசியக் கொடி தலைகீழாகவே பறந்து கொண்டிருந்தது. பின்னர் இதனை அறிந்த அதிகாரிகள், அவசரமாக கொடியை இறக்கி மீண்டும் சரியாக ஏற்றினர்.
நிகழ்ச்சி முடிந்த பின்னர் தேசியக் கொடி தலைகீழாக பறக்கவிடப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, இது எப்படி நடந்தது என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் தான் பதிலளிளக்க வேண்டும் என கூறினார்.