நடு ரோட்டில் படு.. நல்லா கேப் விடு.. இதுதான் சோசியல் டிஸ்டன்சிங்.. சூப்பர் பாடம் நடத்திய போலீஸ்!
அமிருதசரஸ்: கொரோனா வைரஸ் அச்சத்தால் நாடு முழுவதும் தேவையின்றி வீட்டை விட்டு யாரும் வெளியே வரக் கூடாது என அறிவித்துள்ள நிலையில் கூட்டம் கூட்டமாக வெளியே வாகனங்களில் சுற்றித் திரிந்தவர்களை நடு ரோட்டில் படுக்க வைத்து சமூக விலகல் குறித்து போலீஸார் பாடம் எடுத்தனர்.
கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 500- ஐ தாண்டியது. இந்த வைரஸ் பரவலைத் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியாவில் பஞ்சாப், மும்பை, நாக்பூர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் மக்கள் யாரும் சீரியஸாக எடுத்துக் கொள்வதில்லை.
கை தட்டுதல்
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மக்கள் ஊரடங்கின்போது கோவிட் 19-ஐ எதிர்த்து போராடும் போலீஸார், சுகாதாரத் துறையினர், மாவட்ட நிர்வாகம் உள்ளிட்டோருக்கு மரியாதை செலுத்தும் வகையில் கைகளை தட்டி உற்சாகப்படுத்துங்கள் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டிருந்தார்.
விலகல்
ஆனால் அன்றைய தினம் எதற்காக ஊரடங்கு போட்டார்கள் என்பது குறித்து கூட புரிதல் இல்லாமல் இந்த கைதட்டும் நிகழ்ச்சியை விழா போல் வீதிகளில் கூட்டம் கூட்டமாக கொண்டாடினர். இந்த சமூக பரவல் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளது. எனவே தான் சமூக விலகல் குறித்து அரசு வலியுறுத்தி வருகிறது.
சமூக விலகல்
ஆனால் பஞ்சாப்பில் சில இளைஞர்கள் வாகனங்களில் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிந்தனர். இவர்களை மடக்கிய போலீஸார் அவர்களை கடுமையாக திட்டி நூதன தண்டனையை அளித்தனர். அவர்களை வெறிச்சோடிய சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் ஒருவர் பின்னர் ஒருவர் படுக்க வைத்து சமூக விலகலை போலீஸார் கற்று கொடுத்தனர்.
|
கோரிக்கை
இந்த வீடியோ வைரலானது. கொரோனா வைரஸ் பரவல் என்ற சங்கிலியை அறுக்கவே இது போன்ற சமூக விலகல் உள்ளிட்ட நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஆனால் இதை மக்கள் மறந்து ஏதோ பிக்னிக் செல்வது போல் காலியாக உள்ள சாலைகளில் சென்று வருகிறார்கள். இவர்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.