3 சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு முடிவு கட்டிய மோடி...ராகுல் காந்தி கடும் விமர்சனம்!!
சங்க்ரூர்: எப்படி பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி மூலம் சிறு கடைக்காரர்களை பிரதமர் மோடி அழித்தாரோ அதேபோல் தற்போது விவசாயிகளை ஒழித்துக் கட்ட 3 விவசாய சட்டங்களை கொண்டு வந்துள்ளார் மோடி என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று பஞ்சாபில் கடும் விமர்சனம் செய்தார்.
பஞ்சாபில் விவசாய சட்டங்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி டிராக்டர் பேரணி நடத்தி வருகிறது. அரியானாவிலும் இந்தப் பேரணி நாளை நடைபெறுகிறது. பஞ்சாபில் இன்று நடைபெற்ற பேரணியில் கலந்து கொண்ட ராகுல் காந்தி சங்க்ரூர் என்ற இடத்தில் பேசுகையில், ''ஏன் கொரோனா கால கட்டத்திலும் இந்த மூன்று சட்டங்களை நிறைவேற்றுவதற்கு மோடி அரசு அவசரம் காட்டியது.
ஜிஎஸ்டி, பண பதிப்பிழப்பு செய்து சிறு கடைக்காரர்களை மோடி அரசு ஒழித்தது. தற்போது விவசாயிகளை ஒழித்துக் கட்ட மோடி அரசு மூன்று விவசாய சட்டங்களை கொண்டு வந்துள்ளது. விவசாயிகளின் குரல்வளையை இந்த மூன்று சட்டங்கள் மூலம் நெறித்துள்ளனர். விசாயிகளிடம் இருந்து உணவு தானியங்களை கொள்முதல் செய்தல் அவற்றை உரிய முறையில் விநியோகம் செய்தல் ஆகியவற்றுக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும்.
பலாத்காரம் செஞ்சுட்டு அட்வைஸ் பெண்களுக்கா? ஆர்.எஸ்.எஸ்.-ன் ஆணாதிக்க சிந்தனை... ராகுல் செம பாய்ச்சல்
இன்னும் நாட்டில் அதிக மண்டிகளை அமைக்க வேண்டும். விவசாயப் பொருட்களை கொண்டு வருவதற்கு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும். உரிய குறைந்தபட்ச விலை விவசாயிகளுக்கு கிடக்க உத்தரவாதம் இல்லை. இவற்றை முதலில் கடமைக்க வேண்டும்.
ஆனால், மோடி அரசு இவற்றை வலுப்படுத்த எதையும் செய்யவில்லை. மோடி அரசு அதிக மண்டிகளை உருவாக்கி, முறையான விநியோகம் செய்து, கொள்முதல் செய்தால் இங்கு அம்பானி, அதானி பணம் செய்ய முடியாது'' என்றார்.
இவரைத் தொடர்ந்து பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் இந்தக் கூட்டத்தில் பேசினார். மத்திய அரசு கொண்டு வந்து இருக்கும் சட்டத்தை கறுப்பு சட்டம் என்று விமர்சித்தார். விவசாயிகளின் நலனைக் காக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாநிலத்தில் எங்களது அரசு எடுக்கும் என்று உத்தரவாதம் அளித்தார்.
இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் முக்கியத் தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆனால், முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான நவ்ஜோத் சிங் சித்து கலந்து கொள்ளவில்லை.
நாளை அரியானா மாநிலத்தில் டிராக்டர் பேரணி நடைபெறுகிறது. இதிலும் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார். இதற்கு எந்த தடையும் இல்லை என்று அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. ''ராகுல் காந்தியின் டிராக்டர் பேரணி தடுத்து நிறுத்தப்படாது. அமைதிக்கு பங்கம் ஏற்படுவதை மாநில அரசு விரும்பவில்லை. அதே நேரம் அமைதி சீர்குலைந்தால், மாநில அரசு பொறுமை காக்காது'' என்று தெரிவித்துள்ளது.