கள்ளக்காதல்: அப்பாவை கொன்ற அம்மாவை தூக்கில போடுங்க... பிள்ளைகளின் வேதனை கோரிக்கை
கள்ளக்காதலுக்காக கணவனுக்கு விஷம் வைத்து கொன்று தூக்கில் போட்டிருக்கிறார் ஒரு பெண். 12 ஆண்டுகாலமாக குடும்பம் நடத்தி இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொன்றிருக்கிறார்.
பஞ்சாப்: கிராமமோ நகரமோ கள்ளக்காதல் சம்பவங்கள் கொலையில்தான் முடிகின்றன. கணவனை மனைவி கொல்வது, மனைவியை கணவன் கொலை செய்வது என நாளுக்கு நாள் கொலைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. பஞ்சாபில் ஒரு கிராமத்தில் இரண்டு குழந்தைக்கு தாயான பெண் ஒருவர் கள்ளக்காதலனுடன் சேர்ந்து தனது கணவனை கொலை செய்துள்ளார்.
சிம்ரன் கவுர் என்ற அந்த பெண்ணிற்கு ராஜ்ப்ரீத் சிங் என்பவருடன் 12 ஆண்டுகளுக்கு முன் திருமணம் ஆனது. மகிழ்ச்சியான மணவாழ்க்கையின் அடையாளமாக இரண்டு குழந்தைகள் பிறந்தன. இரண்டு குழந்தைகள் பிறந்த பின்னரும் புதிய காதல் தோன்றியது. அதை நிறுத்த சிம்ரன் குடும்பத்தினர் பிரயத்தனப்பட்டனர். ஆனாலும் அவருக்கு கணவனை விட கள்ளக்காதலன் மீதுதான் மோகம் அதிகமாக இருந்தது. அந்த மோகம் கொலை செய்ய தூண்டியது.
காதலனுக்காக தனது கணவனையே கொலை செய்ய திட்டம் போட்டார் சிம்ரன் கவுர். ஞாயிறன்று கறி சோற்றில் விஷம் வைத்து கொடுத்தார். ஆனாலும் அவருக்கு சந்தேகம் ஒருவேளை சாகாவிட்டால் என்ன செய்வது என்று யோசித்த சிம்ரன், தனது கையால் கணவனின் கழுத்தை நெரித்து கொன்றார்.
அதே கையோடு இரண்டு குழந்தைகளையும் தனது அப்பாவின் வீட்டில் கொண்டு போய் விட்டு விட்டு வந்தார். எதைப்பற்றியும் கவலைப்படாமல் தனது கள்ளக்காதலனுடன் சேர்ந்து ஓடிப்போனார்.
அம்மா ஒரு கொலைகாரி அப்பாவை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கிறாள் என்று தாத்தாவிடம் பிள்ளைகள் சொன்னார்கள். அதைக்கேட்டு சிம்மரனின் அப்பா அதிர்ச்சியடைந்தார். அம்மாவிற்கு எப்படியாவது தண்டனை பெற்றுத்தரவேண்டும் என்றும் அம்மாவை தூக்கில் போட வேண்டும் என்றும் தாத்தாவிடம் சொன்னார்கள்.
பேரப்பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மகள் சிம்ரன் வீட்டிற்கு வந்த தாத்தா, அங்கு மயக்க நிலையில் இருந்த ராஜ்ப்ரீத்தை மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அவர் தனது கடைசி மூச்சை நிறுத்திக்கொண்டார். சம்பவம் பற்றி கேள்விப்பட்ட ராஜ்ப்ரீத்தின் அப்பா, போலீசில் புகார் அளிக்கவே ஓடிப்போன சிம்ரனையும் அவரது காதலனையும் போலீசார் தேடி வருகின்றனர்.
இரண்டு பிள்ளைகள் பிறந்த பின்னரும் அவர்களை அனாதையாக தவிக்க விட்டு, கணவனையும் கொலை செய்து விட்டு கள்ளக்காதலனுடன் மாயமான சிம்ரனைப் பற்றி கிராமமே இப்போது கதை கதையாக பேசுகிறது. அம்மாவை கண்டுபிடித்தால் அவரை தூக்கில் போடுங்கள் என்பதே அந்த பிஞ்சுக்குழந்தைகளின் வலியுறுத்தலாக இருக்கிறது.