விஸ்வரூபமெடுத்த மதவெறி.... பத்மஸ்ரீ விருதை திருப்பி கொடுத்தார் பஞ்சாப் பெண் எழுத்தாளர் தலீப் கவுர்
சண்டிகர்: நாட்டில் கருத்து சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் சகிப்புத்தன்மை குறைந்து வருவதற்கு கண்டனம் தெரிவித்தும் "பத்மஸ்ரீ" விருதை பஞ்சாப்பின் மூத்த பெண் எழுத்தாளர் தலீப் கவுர் திருப்பி அனுப்பியுள்ளார்.
பகுத்தறிவு சிந்தனையாளர்கள் கல்பர்கி, கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் போன்றோர் படுகொலை செய்யப்பட்டதற்கும், தாத்ரி படுகொலை சம்பவத்துக்கும் கண்டனம் தெரிவித்து பிரபல எழுத்தாளரும், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் சகோதரியின் மகளான நயன்தார ஷேகல், சாகித்ய அகாடமி விருதை முன் முதன் முதலாக திருப்பி அனுப்பினார்.
அவரை தொடர்ந்து பல எழுத்தாளர்கள் தங்களின் சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அனுப்பி வருகின்றனர்.
இந்நிலையில் பஞ்சாப்பின் மூத்த பெண் எழுத்தாளர் தலீப் கவுர், தமக்கு கடந்த 2004ம் ஆண்டு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ விருதை அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார்.
இவர் கடந்த 1971ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதையும் பெற்றுள்ளார். விருதுகளை திருப்பி அனுப்பிய 12வது பஞ்சாப் எழுத்தாளர் இவர்.
இதேபோல் அஸ்ஸாம் எழுத்தாளர் ஹோமென் பாரோஹெய்ன், மராத்தி தலித் பெண்ணிய எழுத்தாளர் பிரதன்யா தயா பவர், இந்தி மொழிபெயர்ப்பாளர் சமன் லால் ஆகியோரும் தங்களது சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளிப்பதாக அறிவித்துள்ளனர்.
வங்க கவிஞரும் ஒப்படைத்தார்
இதேபோல் வங்கமொழி கவிஞரான மந்தகிரந்தா சென்னும் சாகித்ய அகாடமியின் இளம் எழுத்தாளர்களுக்கான விருதை நேற்று திருப்பி ஒப்படைப்பதாக அறிவித்துள்ளார். 2004ஆம் ஆண்டு மந்தகிரந்தா சென்னுக்கு விருது இவ்விருது வழங்கப்பட்டது.