பூரி ரயில் நிலைய தொடர் தீ விபத்து- தீவிரவாதிகளுக்கு தொடர்பு? என்.ஐ.ஏ. உதவியை நாடும் ஒடிஷா போலீஸ்!!
புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலம் பூரி ரயில் நிலையத்தில் 3 எக்ஸ்பிரஸ் ரயில்களில் அடுத்தடுத்து தீ பிடித்த சம்பவத்துக்கு தீவிரவாதிகள் நாசவேலை காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதனால் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. உதவியை நாட ஒடிஷா போலீசார் முடிவு செய்துள்ளனர்.
பூரி ரயில் நிலையத்தில் நவம்பர் 12-ம் தேதி அடுத்தடுத்து 3 ரயில்களில் தீவிபத்து ஏற்பட்டது. முதலில் நந்தன்கன்னன் எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பிடித்தது.
இந்த ரயில் 4-வது பிளாட்பாரத்தில் டெல்லி செல்வதற்கு தயாராக இருந்தது. அப்போது ரயிலின் 11 மற்றும் 12-வது பெட்டிகளில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது சிறிது நேரத்தில் 2 வது பிளாட்பாரத்தில் இருந்த திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கும் பரவியது. பின்னர் பூரி-ஹவுரா எ்க்ஸ்பிரஸ் ரயிலிலும் தீ பரவி ரயில் நிலையம் முழுவதும் கரும்புகையாக காட்சி அளித்தது. உடனடியாக அங்கு வந்த தீயணைப்புப் படையினர் மிகுந்த போராட்டத்துக்குப் பின்னர் தீயை அணைத்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக ஒடிஷா மாநில ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இத்தீவிபத்துக்கு தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என அம்மாநில போலீஸ் சந்தேகிக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்மாநில காவல்துறை இயக்குனர் கே.பி.சிங் கூறியதாவது:
இதற்கு முன்பு ஹைதராபாத், கயா, கராக்பூர், ஆகிய ரயில் நிலையங்களிலும் இதே போன்று தீ விபத்து ஏற்பட்டது. பூரி ரயில்களில் ஏற்பட்ட தீ விபத்துத் தொடர்பாக கைது செய்யப்பட்ட ராமச்சந்திரன் சுபாஷ் என்பரிடம் ரயில்வே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில், மும்பையைச் சேர்ந்த சிலர் நாட்டின் முக்கிய வழிபாட்டுத் தலங்களை இணைக்கும் ரயில்களில் இதுபோன்ற அசம்பாவிதங்களை நடத்த திட்டமிட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதற்காக ராமச்சந்திர சுபாஷுக்கு ஒரு லட்சம் ரூபாய் முன் பணமாக கொடுக்கப்பட்டுள்ளது.
இதில் தீவிரவாத அமைப்புகள் சம்மந்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதால் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. உதவியை நாடி இருகிறோம்.
இவ்வாறு கே.பி.சிங். என்று தெரிவித்தார்.