லக்வியை விடுவித்தால்... இந்தியாவின் மிரட்டலுக்கு பணிந்த பாகிஸ்தான்!
டெல்லி: லக்வியை மீண்டும் சிறையில் அடைக்காவிட்டால் தக்க விலை கொடுக்க வேண்டும் என்ற இந்தியாவின் உறுதியான எச்சரிக்கைதான் ஜாமீன் ரத்துக்கான காரணம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
2008 மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புள்ள லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஷகி உர் ரகுமான் லக்விக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியதுமே இந்தியா கடும் அதிர்ச்சியடைந்தது. பெஷாவர் தாக்குதல் நடந்துள்ள நிலையில் தீவிரவாதத்துக்கு எதிரான நிலைப்பாட்டை பாகிஸ்தான் எடுக்கும் என்ற எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டதாக இந்தியாவில் விமர்சனங்கள் எழுந்தன.
இந்நிலையில்தான் லக்வியின் ஜாமீனுக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ள பாகிஸ்தான், பொது அமைதி பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இந்தியா, அமெரிக்கா நெருக்கடியால் லஷ்கர் இயக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது பாகிஸ்தாந். இதனால் காஷ்மீரில் அமைதியான முறையில் நான்கு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், லக்வியின் விடுதலை அதில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக உளவுத்துறை எச்சரித்தது. வழக்கமான நடைமுறைப்படி பாகிஸ்தானை அணுகினால், இந்தியாவின் கோரிக்கையை அவர்கள் ஏற்க மாட்டார்கள் என்பதை தெரிந்து கொண்ட இந்தியா, இம்முறை வேறு அணுகுமுறையை கையாண்டது.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி இன்று, இதையேத்தான் சுட்டிக்காட்டி பேசினார். இந்தியாவின் எண்ணத்தை பாகிஸ்தானிடம் கொண்டு சேர்த்துவிட்டோம் என்று மோடி லோக்சபாவில் கூறினார். லக்வியை ஜாமீனில் வெளியேவிட அனுமதித்தது, மனிதத்துக்கு எதிரான தாக்குதல் என்றும் மோடி குறிப்பிட்டார். மேலும் பாகிஸ்தானுக்கு கடுமையான தகவல் இந்தியாவிடமிருந்து சென்றுள்ளதாகவும் மோடி கூறினார். அந்த எச்சரிக்கை என்னவென்று அவர் கூறாவிட்டாலும், அரசு தரப்பில் இருந்து கசிந்த தகவல் அந்த எச்சரிக்கை என்னவென்று தெரிவித்தது. 'லக்வியை சிறையில் அடைக்காவிட்டால் பாகிஸ்தான் தக்க விலை தர வேண்டியிருக்கும்' என்பதுதான் அந்த எச்சரிக்கை என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த வார்த்தையை இந்திய பாதுகாப்பு துறை மூத்த அதிகாரி ஒருவர் பாகிஸ்தான் அதிகாரியிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே பெஷாவர் தாக்குதலால் மக்கள் கோபம் தீவிரவாதிகளுக்கு எதிராக இருப்பதை உணர்ந்துள்ள பாகிஸ்தான், உலக நாடுகளை பகைக்க விரும்பவில்லை. உடனடியாக லக்வி சிறையில் லட்டுபோல தூக்கி வைக்கப்பட்டார்.