பிவி சிந்து, சாக்ஷி மாலிக், தீபா கர்மாகர், ஜித்து ராய்க்கு கேல் ரத்னா விருது
டெல்லி: விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் நாட்டின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பி.வி சிந்து (பேட்மிண்டன்) சாக்ஷி மாலிக் (மல்யுத்தம்) தீபா கர்மாகர் (ஜிம்னாஸ்டிக்), ஜித்து ராய் ( துப்பாக்கிசுடுதல்), ஆகிய நான்கு பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்று பெருமை சேர்த்தவர் பிவி சிந்து. அதேபோல மகளிர் மல்யுத்தப் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்று பெருமை சேர்த்தவர் சாக்ஷி மாலிக்.
இதேபோல ஜிம்னாஸ்டிக் பிரிவில் முதன் முதலாக இந்தியாவில் இருந்து சென்று நான்காவது இடத்திற்கு வந்தவர் தீபா கர்மாகர், துப்பாக்கி சுடுதலில் பதக்கத்தை நூலிழையில் தவறவிட்டவர் ஜித்து ராய் இவர்கள் நால்வரும் 2016 ம் ஆண்டு கேல் ரத்னா விருதுக்கு தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உயரிய விருது
ராஜீவ் காந்தி கேல் ரத்னா இந்திய விளையாட்டுத் துறையில் சாதனை படைத்தோருக்கு வழங்கப்படும் உயரிய விருதாகும். இந்தி மொழியில் கேல் ரத்னா என்பது விளையாட்டில் இரத்தினக்கல் போன்றவர் என பொருள்படும். முன்னாள் இந்தியப் பிரதமர் மறைந்த ராஜீவ் காந்தி நினைவாக இவ்விருது பெயரிடப்பட்டுள்ளது.
விஸ்வநாதன் ஆனந்த்
1991 ம் ஆண்டில் இருந்து இந்த விருது வழங்கப்படுகிறது. பதக்கமும், 7,50,000 ரூபாய் ரொக்கப்பரிசும் மத்திய அரசால் வழங்கப்படுகிறது. முதன்முதலாக இந்த விருது செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிற்கு வழங்கப்பட்டது.
அர்ஜூனா விருது
2016ம் ஆண்டிற்கான அர்ஜுனா விருது ரஹானே, லலிதா பாபர், சிவ தபா, அபூர்வி சாண்டெலா உள்பட 15 விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
துரோணாச்சாரியார் விருது
தடகள பயிற்சியாளர் நாகபுரி ரமேஷ், குத்துச்சண்டை பயிற்சியாளர் சாகர் மால் தயால், கிரிக்கெட் பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா, ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் பிஸ்வேஸ்வர் நந்தி, நீச்சல் பயிற்சியாளர் பிரதீப் குமார் உள்ளிட்டோருக்கு துரோணாச்சாரியார் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.