மோடி, மம்தா, தேசிய கீதம்... பதில் சொல்ல மறுத்த ரயில் பயணி மீது சகபயணிகள் சரிமாரி தாக்குதல்.
ரயிலில் பிரதமர் குறித்த கேள்விக்கு பதில் தெரியாத பயணியை சக பயணிகள் தாக்கியுள்ளனர்.
மால்டா: மேற்கு வங்க மாநிலத்தில், பிரதமர் மோடி மற்றும் தேசிய கீதம் பற்றிய கேள்விகளுக்கு சரியாக பதில் சொல்லாத நபரை சிலர் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 14ம் தேதி மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் இருந்து கலியாக் என்ற ஊருக்கு வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் ரயிலில் சென்றுக்கொண்டிருந்தார். அந்த ரயிலில் ஏறிய நான்கு பேர், அவரது பக்கத்தில் அமர்ந்து, பிரதமர் மோடி, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் தேசிய கீதம் குறித்து சில கேள்விகளை எழுப்பியுள்ளனர். அதற்கு அந்த தொழிலாளி சரியாக பதில் அளிக்கவில்லை.
இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நான்கு பேரும், தொழிலாளியை சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள், பாந்தல் ரயில் நிலையத்தில் இறங்கிவிட்டனர்.
இந்த சம்பவம் குறித்து தன்னார்வ தொண்டு நிறுவனம் புகார் அளித்துள்ளது. சக பயணியர் எடுத்த செல்போன் வீடியோவின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படும் என காளியாக் காவல் ஆய்வாயர் சுமன் பானர்ஜி தெரிவித்துள்ளார்.