பல்கலை. தேர்வில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த பேராசிரியர் செய்த வேலையை பாருங்கள்
டெல்லி: பனாரஸ் பல்கலைக்கழக தேர்வில் கேட்கப்பட்ட சில வினாக்கள் சர்ச்சைக்கு காரணமாகியுள்ளன. ஆர்.எஸ்.எஸ் அமைப்பை சேர்ந்த பேராசிரியர் தயாரித்த அந்த கேள்வித்தாள்கள், பாடத்திட்டத்திலேயே இல்லாதவை என்பது சர்ச்சை உச்சமடைய மற்றொரு காரணம்.
பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகத்தின் சார்பில் எம்.ஏ. அரசியல் அறிவியல் பாடத்திற்கான வினாத்தாள் தயாரிக்கும் பணியை பேராசிரியர் குஷால் கிஷோர் மிஷ்ரா மேற்கொண்டிருந்தார்.
15 மதிப்பெண்ணுக்கான கேள்வியாக, கவுடில்யரின் அர்த்தசாஸ்திரத்தில் ஜிஎஸ்டி வரி குறித்து இடம் பெற்றுள்ளதை விளக்குமாறு கேட்கப்பட்டுள்ளது. மேலும், உலகமயமாக்கல் குறித்து முதலில் யோசித்த இந்தியர் மனுதான், விவாதிக்கவும் என்று மற்றொரு கேள்வியும் இடம் பெற்றுள்ளது.
மாணவர்கள் அதிர்ச்சி
இவ்விரு கேள்விகளும் பல்கலைக்கழக பாடத்திட்டத்திலேயே இல்லாதவையாம். இதுகுறித்து மாணவர்கள் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். ஆனால் பேராசிரியர் குஷாலோ தனது செயலை நியாயப்படுத்தியுள்ளார்.
பாடத்திட்டத்தில் இல்லை
பாடத்திட்டத்தில் இல்லாததை மாணவர்களுக்கு கற்பிப்பதில் தப்பில்லை என்று கூறும் அவர், ஏற்கனவே இதுகுறித்து பாடங்களை தான் நடத்தியுள்ளதாக குறிப்பிடுகிறார். அவரிடம் பயிலும் மாணவர்கள் இதை ஒப்புக்கொண்டுள்ளனர். பாடத்திட்டத்தில் இல்லாவிட்டாலும், பேராசிரியர் கூறியதை நாங்கள் எழுதிக் கொண்டோம் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
வேறு மாணவர்கள் நிலை
அதேநேரம், பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட பிற கல்லூரி மாணவர்களுக்கு இந்த கேள்வி மிகவும் புதிதாகும். இதனால் தங்களுக்கு மதிப்பெண் கிடைக்காதே என்ற கவலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்காரர்
இதுகுறித்து ஊடகங்கள் தொடர்பு கொண்டு கேட்டபோது குஷால் கூறுகையில், தான் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் உறுப்பினர் என்பது உண்மைதான் என்றபோதிலும், தனது தனிப்பட்ட நம்பிக்கைகளை மாணவர்களுக்கு சொல்லித்தருவதில்லை என்றும், கவுடில்யர் மற்றும் மனு ஆகியோரின் வரலாறு அடிப்படையில் தான் மாணவர்களுக்கு கற்பித்ததாகவும் கூறுகிறார்.
தெரியுமா மேன்?
மாணவ் மற்றும் மேன் ஆகிய வார்த்தைகள் மனு என்ற வார்த்தையில் இருந்து உருவானவை. மனு குறித்த குறிப்புகளை நியூசிலாந்து, சீனா ஆகிய நாடுகளிலும் பார்க்க முடியும் என்று கூறுகிறார் இந்த பேராசிரியர். தனது தனிப்பட்ட கருத்துகளை மாணவர் சமூகத்தினர் மத்தியில் உருவாக்க குஷால் முயன்றுள்ளது கண்டனங்களை ஈட்டித் தந்துள்ளது.
நடவடிக்கை தேவை
பாடத் திட்டத்தில் இல்லாத ஒரு விஷயத்தை வினாத்தாளில் கொண்டுவந்து மாணவர்கள் மத்தியில், தனது நம்பிக்கை சார்ந்த விஷயங்களை உட்புகுத்த பேராசிரியர் முயன்றுள்ளார் என்பது தெளிவாக தெரிகிறது. மனு நீதி குறித்த சர்ச்சை இந்தியாவில் ஓயாத நிலையில், அதை தூக்கிப்பிடிக்கும் வகையில், பேராசிரியர் குஷால் செயல்பட்டுள்ளார். இவர் மீது கல்வித்துறை துறை ரீதியான நடவடிக்கை எடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.