நடிகை ஜியா கான் வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் இனி வெளியே வரும், வீடியோவும் கூட: ராபியா
மும்பை: நடிகை ஜியா கான் தற்கொலை தொடர்பாக தன்னிடம் வீடியோ ஒன்று இருப்பதாகவும், அதை விரைவில் வெளியிடப் போவதாகவும் அவரின் தாய் ராபியா கான் தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகை ஜியா கான் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் மாதம் மும்பை ஜுஹு பகுதியில் உள்ள தனது வீட்டில் துப்பட்டாவால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் தான் தற்கொலை செய்யக் காரணம் தனது காதலரும், நடிகருமான சூரஜ் பஞ்சோலி என்று கடிதம் எழுதி வைத்திருந்தார்.
மேலும் அந்த கடிதத்தில் சூரஜ் தன்னை கட்டாயப்படுத்தி கருவை கலைக்க செய்ததையும் குறிப்பிட்டிருந்தார்.
கொலை
ஜியாவின் மரணம் தற்கொலை என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் ஜியாவின் தாய் ராபியாவோ அது கொலை என்று தொடர்ந்து தெரிவித்து வருகிறார்.
சிபிஐ
ஜியா கான் வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி ராபியா மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம் வழக்கை சிபிஐக்கு மாற்றியது.
சூரஜ்
சிபிஐ கடந்த வாரம் ஜியா கான் வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. அதில் சூரஜ் ஜியாவை தற்கொலை செய்ய தூண்டியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றப்பத்திரிக்கை திருப்திகரமாக இல்லை என்று ராபியா தெரிவித்துள்ளார்.
வீடியோ
ஜியா கான் தற்கொலை செய்து கொண்ட அன்று எடுக்கப்பட்ட முக்கிய வீடியோ தன்னிடம் உள்ளதாகவும், அதை விரைவில் வெளியிடப் போவதாகவும் ராபியா கூறியுள்ளார். ஜியா வழக்கில் பெரிய உண்மைகள் எல்லாம் இனி தான் வெளியே வரும் என்றும் கூறுகிறார் ராபியா.
சண்டை
ஜியா கான் தற்கொலை செய்ய ஒரு மணிநேரத்திற்கு முன்பு சூரஜுக்கும், அவருக்கும் இடையே போன் மூலம் சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும் சூரஜ் ஜியாவை திட்ட பல எஸ்.எம்.எஸ்.கள் அனுப்பியுள்ளார் என்று குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.