லாலுவுக்கு மருமகளாகும் ஆசை இருக்கா உங்களுக்கு… அப்ப இதப் படிங்க முதல்ல
வீட்டை கவனித்து எங்களை மதிக்கும் மருமகள்களே வேண்டும் என்று பிகாரின் முன்னாள் முதல்வரும் லாலு பிரசாத்தின் மனைவியுமான ராப்ரி தேவி கூறியுள்ளார்.
பாட்னா: தங்கள் குடும்பத்திற்கு மாலுக்கு செல்லும் பெண்கள் மருமகளாக தேவை இல்லை என்று பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.
பிகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ். அவரது மனைவி ராப்ரி தேவி. இவரும் பிகாரின் முதல்வராக பணியாற்றியவர். இவர்களது குடும்பத்தில் இருந்து மகன்கள் இருவர் தற்போதுள்ள நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சியில் இடம்பெற்றுள்ளனர்.
நிதிஷ் குமாரின் அமைச்சரவையில் லாலுவின் மகன்களான தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக உள்ளார். சுகாதார துறை அமைச்சராக தேஜ் பிரதாப் உள்ளார். இவர்கள் இருவருக்கும் இன்னும் திருமணம் ஆகவில்லை.
இந்நிலையில், லாலு பிரசாத் யாதவிற்கு 70வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் லாலுவின் மனைவி தனது மகன்களுக்கு எப்படிப்பட்ட மனைவிகள் அமைய வேண்டும் என்று கூறியுள்ளார்.
தனது வீட்டிற்கு வரும் மருமகள் வீட்டை கட்டிக்காத்து, தன்னைப் போன்ற பெரியவர்களுக்கு மரியாதை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ள ராப்ரி தேவி, சினிமாவிற்கும் மாலுக்கும் செல்லும் பெண்கள் வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். வீட்டிற்கு வரும் மருமகள்கள் நல்ல பண்பாட்டை கொண்டிருக்க வேண்டும் என்றும் ராப்ரி தேவி கூறியுள்ளார்.