ஆர்.எஸ்.எஸ். உடை மாற்றத்திற்கு ராப்ரிதேவிதான் காரணம்… லாலு பிரசாத் யாதவ்
பாட்னா: ஆர்.எஸ்.எஸ் உடை மாற்றத்திற்கு தனது மனைவி ராப்ரிதேவிதான் காரணம் என்று முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கூறியுள்ளார்.
கடந்த 90 ஆண்டுகளாக இருந்து வந்த காக்கி நிற அரைக்கால் பேண்டை முழு நீள பேண்டாக மாற்றிக் கொள்ள ஆர்.எஸ்.எஸ். அண்மையில் முடிவு எடுத்து மாற்றியது.
இதற்கு காரணம் தனது மனைவி ராப்ரிதேவிதான் என்று லாலு பிரசாத் யாதவ் தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரியில், ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் அரைகால் சட்டை அணிந்து பொது இடங்களில் கூச்சமில்லாமல் அலைவதாக தன் மனைவி விமர்சித்ததாகவும், இதனைத் தொடர்ந்துதான் ஆர்.எஸ்.எஸ். உடை மாற்றம் செய்ய முடிவு செய்தது என்றும் லாலு கூறியுள்ளார்.
இப்போது அவர்களது உடையில் மாற்றத்தை உருவாக்கி விட்டோம். இனி மக்களின் மனதில் மதவாதம் என்கிற விஷயத்தையும் வன்முறைகளையும் பரப்பு வரும் அவர்களின் சிந்தனையையும் விரைவில் மாற்றுவோம் என்று லாலு பிரசாத் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கு, மத்திய அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி, ஆர்.எஸ்.எஸ். சீருடை மாற்றம் குறித்து லாலு பேசியது குறித்து பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் லாலு பிகாரில் உள்ள அரசியல் பிரச்சனையில் மன அழுத்தத்தில் உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.