அடுப்பங்கரையிலிருந்து மறுபடியும் அரசியலுக்கு வருகிறார் ராப்ரி தேவி!
பாட்னா: லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழலில் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு விட்டது. அவரும் சிறைக்குப் போய் விட்டார். இதையடுத்து ராஷ்டிரிய ஜனதாதள கட்சியின் தலைமைப் பொறுப்புக்கு அவரது மனைவியும், லாலு எப்போதெல்லாம் சிறைக்குப் போகிறாரோ அப்போதெல்லாம் கை கொடுக்கும் தெய்வமும், முன்னாள் முதல்வருமான ராப்ரி தேவி வரவுள்ளார்.
லாலு தனக்கு சிக்கல் வரும்போதமல்லாம் ராப்ரியைத்தான் முன்னிறுத்துவார். மீண்டும் லைம் லைட்டுக்கு வந்ததும் ராப்ரியை அடுப்பங்கரைக்கு அனுப்பி விடுவார்.
இப்படித்தான் மாட்டுத் தீவன ஊழலில் சிக்கி முதல்வர் பதவியை ஏற்க முடியாத நிலை வந்தபோதும் அதிரடியாக, நாடே பதறிப் போய் பார்க்கும் அளவுக்கு ராப்ரியை முதல்வர் பதவியில் அமர்த்தி அத்தனை பேரையும் திடுக்கிட வைத்தார். இப்போது மீண்டும் அதே மாட்டுத் தீவன ஊழலில் சிறைக்குப் போய் விட்டார் லாலு. எனவே ராப்ரி தேவி மீண்டும் தீவிர அரசியலுக்குத் திரும்பவுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
97ல் லாலு போட்ட குண்டு
1997ம்ஆண்டு மாட்டுத் தீவன ஊழலில் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ் சிபிஐ கோர்ட்டில் சரணடைந்து சிறைக்குப் போனார். இதையடுத்து அவர் தனது பதவியை விட்டு விலக நேரிட்டது. அதைத் தொடர்ந்து ராப்ரியை முதல்வராக்கினார் லாலு.
சமையலைத் தவிர வேறு எதுவும் தெரியாது
ராப்ரி தேவி முதல்வரா என்று பீகார் மக்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசமே அதிர்ந்து போய் பார்த்தது. காரணம், அவர் ஒரு இல்லத்தரசி. வீட்டை விட்டு வெளியே வராதவர். சமையல் செய்வதிலும், குடும்பத்தைப் பார்த்துக் கொள்வதிலும், வீட்டில் வளர்க்கும் மாடுகளைப் பராமரிப்பதிலும்தான் தீவிரமாக இருந்தவர் ராப்ரி. அவர் முதல்வர் பதவியில் அமர்ந்தபோது அத்தனை பேரும் அதிசயித்துத்தான் போனார்கள்.
மறுபடியும் ராப்ரி
இந்த நிலையில் அதே மாட்டுத் தீவன ஊழலில் மறுபடியும் சிறைக்குப் போயுள்ளார் லாலு. எனவே மீண்டும் ராப்ரி கட்சிக்குத் தலைமை தாங்குவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
லாலுவை விட்டால் ராப்ரிதான்...
இதுகுறித்து லாலு கட்சியைச் சேர்ந்த ஒரு மூத்த தலைவர் கூறுகையில், ராஷ்டிரிய ஜனதாதளத்தைப் பொறுத்தவரை லாலுவுக்கு அடுத்த தலைவர் ராப்ரிதான். இருப்பினும் இதுகுறித்து கட்சிதான் முடிவெடுத்து அறிவிக்கும் என்றார்.
துணைத் தலைவர்கள் உதவியுடன்
ராஷ்டிரிய ஜனதாதளத்தின் துணைத் தலைவர்களான ரகுவன்ஷ் பிரசாத் சிங், ரகுநாத் ஜா, சகுனி செளத்ரி, பக்ஸார் எம்.பி ஜகதானந்த் சிங், ராம்தியோ பண்டாரி ஆகியோரின் துணையுடன் கட்சியை ராப்ரி நடத்துவார் என்றும் கூறுகிறார்கள்.
இளைய மகன் வருவாரா...?
அதேசமயம், லாலுவின் இளைய மகனான தேஜஸ்வி யாதவ் கட்சித் தலைவராகக் கூடிய வாய்ப்புகள் இருப்பதாகவும் ஒரு தகவல் கூறுகிறது. கடந்த மே 15ம் தேதிதான் தேஜஸ்வியை அரசியல் களத்தில் இறக்கினார் லாலு.
அம்மாவுக்குத் துணைக்கு
இருப்பினும் அவரை இப்போதே முக்கியப் பொறுப்பில் அமர்த்தாமல் தனது தாயாருக்கு உதவியாக அவரை லாலு இருக்க வைக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது.
மிசாவுக்கும் சான்ஸ் உண்டு
அதேசமயம், லாலுவின் மகள் மிசா பாரதியும் கட்சியில் முக்கியப் பொறுப்பு வகிப்பார் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது. அவர் வருகிற லோக்சபா தேர்தலில் பாடலிபுத்ரா தொகுதியிலிருந்து போட்டியிட மும்முரமாக உள்ளாராம்.
அரசியலாச்சே.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. லாலுவின் ஆயா கூட கட்சித் தலைவராகலாம்...!