"அவசரத்துக்காக" வந்து விட்டு போலீஸ் அதிகாரி சீட்டில் ஹாயாக உட்கார்ந்த பெண் சாமியார்!
கடந்த வாரம் டெல்லியில் தசரா விழா கொண்டாட்டத்தின்போது கழிவறையை பயன்படுத்த வந்த இடத்தில் காவல் நிலைய அதிகாரியின் இருக்கையில் பெண் சாமியார் ராதே மா ஹாயாக உட்கார்ந்திருந்தார்.
டெல்லி: டெல்லியில் தசரா விழா கொண்டாட்டத்தின்போது காவல் நிலைய அதிகாரி அலுவலகத்தில் உள்ள கழிவறையை பயன்படுத்த வந்த சாமியார் ராதே மா அதிகாரியின் இருக்கையில் அமர்ந்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ராம் லீலாவில் கடந்த வாரம் தசரா விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அந்த விழாவில் பெண் சாமியாரான ராதே மா கலந்து கொண்டார். அப்போது அவர் இயற்கை உபாதையை கழிப்பதற்காக அங்குள்ள கிழக்கு டெல்லியில் விவேக் விஹார் காவல் நிலைய அதிகாரியின் அலுவலகத்துக்கு வந்தார்.
அங்கு அந்த அதிகாரியின் இருக்கையில் சாமியார் ராதே மா அமர்ந்திருப்பது போன்றும் அருகில் அந்த அதிகாரி கைக்கட்டி நின்றிருப்பது போன்றும் புகைப்படம் வைரலாக பரவியது.
இயற்கை உபாதைக்காக
இதனால் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து அந்த அதிகாரி கூறுகையில், ராதே மா தனது ஆதரவாளர்களுடன் எனது அலுவலகத்துக்கு வந்தார். அப்போது அவர் இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் என்னிடம் கூறினார்.
இருக்கையில் சில நிமிடங்கள்
அதனால் அவரை கழிப்பறையை பயன்படுத்த அனுமதித்தேன். எனது இருக்கையில் சில நிமிடங்கள்தான் உட்கார்ந்திருந்தார். பிறகு நான் கைக்கட்டி கொண்டு அலுவலகத்தை விட்டு செல்லுமாறு வேண்டுகோள் விடுத்தேன் என்றார்.
சர்ச்சை எழுந்தது
அதிகாரியின் அனுமதி இல்லாமல் அவரது இருக்கையில் சாமியார் உட்கார்ந்தது தெரியவந்தது. இதுகுறித்து டெல்லி காவல் துறை முதன்மை செய்தித் தொடர்பாளர் தீபேந்திரா பதாக் கூறுகையில், ராதே மா அதிகாரியின் இருக்கையில் உட்கார்ந்திருந்தது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
அவமானப்படுத்திய ராதே மா
தன்னை தானே சாமியார் எனக் கூறி கொள்ளும் ராதே மா காவல் துறை அதிகாரியின் இருக்கையில் உட்கார்ந்தது காலக் கொடுமை எனக் கூறும் மக்கள் ஒரு சாமியாருக்கு பயந்து கைகளை கட்டிக் கொண்டு நிற்கும் அதிகாரிக்கு இது அவமானம் என்றும் கூறுகின்றனர்.