போலீஸ் சம்மனை பார்த்ததும் தற்கொலை செய்ய நினைத்தேன்: ராதே மா கண்ணீர்
மும்பை: வரதட்சணை கொடுமை வழக்கு தொடர்பாக போலீசார் சம்மன் அனுப்பியபோது தற்கொலை செய்ய நினைத்ததாக பெண் சாமியார் ராதே மா தெரிவித்துள்ளார்.
மும்பையைச் சேர்ந்த பெண் ஒருவர் அளித்த புகாரின்பேரில் போலீசார் பெண் சாமியார் ராதே மா மீது வரதட்சணை கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பாக அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இது குறித்து ராதே மா கூறுகையில்,
அதிர்ச்சி
போலீசார் என்னை காவல் நிலையத்திற்கு வருமாறு கூறியுள்ளதாக என் ஆதரவாளர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார். அதை கேட்டு நான் அப்படியே அதிர்ச்சி அடைந்துவிட்டேன்.
தற்கொலை
காவல் நிலையத்திற்கு என்னை வரவழைக்கும் அளவுக்கு நான் என்ன தவறு செய்துவிட்டேன் என்று யோசித்து பார்த்தேன். போலீசார் அழைத்ததுமே தற்கொலை செய்து கொள்ளலாமா என்று நினைத்தேன்.
தண்டனை
நான் ஏதாவது தவறு செய்திருந்தால் அதற்கான தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளேன். என் மீது குற்றம் கூறியவர்களை கடவுள் ஆசிர்வாதம் செய்து அவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை அளிக்கட்டும்.
டாலி
நடிகை டாலி பிந்த்ராவால் நான் காயப்பட்டுவிட்டேன்(கண்ணீருடன் கூறினார்). அவரை சிறந்த மனுஷியாக்க நினைத்தேன். அவர் நான் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு வந்து இடையிடையே கத்தியதுடன் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தியுள்ளார். தன்னைத் தான் அனைவரும் கவனிக்க வேண்டும் என்ற நினைப்பு அவருக்கு. அவர் ராதே மாவாக விரும்பினார் என்றார் ராதே மா.