பிரான்ஸ் ஒப்பந்தம் முதல் ரிலையன்ஸ் டிபன்ஸ் வரை.. ரபேல் ஒப்பந்தமும் வழக்கும் கடந்து வந்த பாதை!
ரபேல் ஒப்பந்தமும் வழக்கும் இந்திய பாதுகாப்பு துறையில் போபர்ஸ் வழக்கிற்கு பின் மிக முக்கியமான வழக்காக பார்க்கப்படுகிறது.
Recommended Video
டெல்லி: ரபேல் ஒப்பந்தமும் வழக்கும் இந்திய பாதுகாப்பு துறையில் போபர்ஸ் வழக்கிற்கு பின் மிக முக்கியமான வழக்காக பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் பல முக்கியமான வாதங்கள், ஆதாரங்கள் வைக்கப்பட்டு உள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் ரபேல் வழங்கின் மறுசீராய்வு மனுக்கள் மீதான வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. ரபேல் ஒப்பந்தம் குறித்து நீதிமன்ற கண்காணிப்பில் அல்லது சிபிஐ மூலம் விசாரணை நடத்த வேண்டும் என்பதே இந்த வழக்கின் கோரிக்கை.
ரபேல் வழக்கில் முதலில் 5 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் தொடர்ந்த பொதுநல வழக்கு ஆகும் இது. இதில் வழக்கறிஞர்கள் எம்.எல்.ஷர்மா மற்றும் வினீத் தண்டா, யஷ்வந்த் சின்கா, பிரசாந்த் பூஷன் மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
கடந்து வந்த பாதை என்ன?
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த தீர்ப்பை வழங்க உள்ளது. இந்த வழக்கு மற்றும் ஒப்பந்தம் கடந்து வந்த பாதையை பார்க்கலாம்:
- ரபேல் இரண்டு இன்ஜின் கொண்ட மல்டி ரோல் வகை காம்பேட் ரக MMRCA வகை விமானம் ஆகும்.
- காங்கிரஸ் அரசின் ஆட்சியில் 2001ல் ரபேல் ஒப்பந்தத்திற்காக திட்டம் போடப்பட்டு, 2007ல் பல பேச்சுவார்த்தைகள் நடத்தி, 2012 தொடக்கத்தில் ரபேல் விமானங்களை வாங்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
- ரபேலை வாங்குவதற்காக பல நாடுகள் இதற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. முதலில் அமெரிக்கா, ஐரோப்பா, ரஷ்யா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் மற்ற நாடுகளை விட குறைந்த விலையில் விமானம் தருவதால் பிரான்ஸ் நாட்டுடன் போடப்பட்டது.
- இந்த விமானம் வாங்க Dassault என்ற பிரான்ஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனாலும் இந்த ஒப்பந்தம் இழுத்தடிக்கப்பட்டது.
- இந்த ஒப்பந்தம் பாஜக ஆட்சியில்தான் வெற்றிகரமாகக் கையெழுத்து ஆனது. முழுமையான ஒப்பந்தம் நிர்மலா சீதாராமன் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்த போது செய்யப்பட்டது.
- பிரதமர் மோடி பிரான்ஸ் சென்று இதற்காக அதிகாரிகளை சந்தித்து ஒப்பந்தத்தை கையெழுத்திட்டார்.
ஊழல் புகார்
இந்த ஒப்பந்தத்தில் வைக்கப்பட்ட ஊழல் புகார்கள்,
- காங்கிரஸ் ஒப்பந்தத்தின் படி, மொத்தம் 126 விமானங்களை இந்திய அரசு வாங்க இருந்தது. அதில் 18 விமானங்கள் ஏற்கனவே தயார் நிலையில் உருவாக்கப்பட்டு இந்தியாவிற்கு அனுப்பப்படும். ஆனால் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின், 126 விமானங்களை வாங்க வேண்டாம் வெறும் 36 விமானங்களை மட்டும் வாங்குவோம் என்று முடிவு செய்யப்பட்டது.
- பிரான்ஸ் விமான தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதாவது காங்கிரஸ் ஒரு விமானத்தை 350 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக ஒப்பந்தம் செய்ததுபாஜக பிரான்ஸ் ஒப்பந்தத்தில் ஒரு விமானம் ரூ.1,670.70 கோடிக்கு வாங்கப்பட்டு இருக்கிறது.
- இதன் காரணமாக ஒரு விமானத்திற்கு ரூ.1321 கோடி இழப்பு ஏற்பட்டு இருக்கிறது.
- இதன் காரணமாக மொத்தம் 50,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கிறது. அதவாது பாஜக வேண்டுமென்று அதிக விலைக்கு விமானங்களை வாங்கியுள்ளது. ஆனால் மத்திய அரசு இதற்கான விலையை வெளியிடவில்லை.
- மேலும் மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மையம், ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனம் இரண்டும் இதில் இருந்து நீக்கப்பட்டு அங்கு அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் சேர்க்கப்பட்டு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது சர்ச்சையாகி உள்ளது.
- ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனம் இந்த ஒப்பந்தத்திற்கு வெறும் 10 நாட்களுக்கு முன்புதான் தொடங்கப்பட்டது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.
தி இந்து ஆதாரங்கள்
இந்த மறுசீராய்வு வழக்கில் பின் வரும் தி இந்து கட்டுரைகளின் ஆதாரங்கள் அதிக முக்கியத்துவம் பெறுகிறது,
- ரபேல் ஒப்பந்தத்தில் பிரதமர் அலுவலகம் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது.
- ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய ஒப்பந்த குழுவின் பேச்சுவார்த்தை மட்டுப்படுத்தப்பட்டது.
- பிரதமர் அலுவலகத்தின் பேச்சுவார்த்தைக்கு இந்திய குழுவே எதிர்ப்பு தெரிவித்தது. இது தொடர்பான கடித பரிவர்த்தனை.
- ரிலையன்ஸ் நிறுவனத்திற்காக ஒப்பந்த விதிகளை தளர்த்தியது.
- முறைகேடாக ரிலையன்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டது.
- ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசுக்கு, பிரான்ஸ் அரசு எந்த விதமான வங்கி உத்திரவாதமும் அளிக்கவில்லை. இதனால் ரபேல் ஒப்பந்தத்தில் திட்டமிடப்பட்டதை விட இந்தியாவிற்கு அதிக செலவு ஏற்பட்டு உள்ளது என்பது குறித்த ஆதாரம்.
- சிஏஜி அறிக்கையில் தவறான தகவல்கள் உள்ளது குறித்த ஆதாரம். கணக்குகள் தவறு.
- மிக முக்கியமாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உண்மைகளை மறைத்தது என்பது தொடர்பான ஆதாரம்.
அரசு வாதங்கள்
மத்திய அரசு தாக்கல் செய்த ஆதாரங்கள், வாதங்கள் இவைதான்,
- மத்திய அரசு ரபேல் ஒப்பந்தம் தொடர்பான பத்திரங்களை அரசு உச்ச நீதிமன்றத்தில் 14 பக்க அறிக்கையாக தாக்கல் செய்தது.
- விமானம் குறித்த உண்மையான விலை விவரங்களை அளிக்க முடியாது. அப்படி விலை விவரங்களை அளித்தால் அது இந்தியா பாதுகாப்பிற்கு பிரச்சனை ஆகும். இது ராணுவ பாதுகாப்பு தொடர்பானது என்று மத்திய அரசு கூறியது.
- பிரான்ஸ் ஒப்பந்தத்தின்படி விலை விவரங்களை வெளியே அளிக்க கூடாது. பிரான்ஸ் அனுமதியுடன் மட்டுமே ரபேல் ஒப்பந்தம் தொடர்பான விலை விபரங்களை அளிக்க முடியும் என்று கூறியது.
- மேலும் மத்திய அரசு, டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்தத்தாரரை அரசு தேர்வு செய்யவில்லை. அதை தேர்வு செய்தது டசால்ட் நிறுவனம்தான் என்று கூறியது. ஒப்பந்த முறைப்படி அதற்கான உரிமை டசால்ட் நிறுவனத்திற்குத்தான் இருக்கிறது. அதனால் அவர்கள்தான் அதை தேர்வு செய்தது என்று கூறியது.
- டசால்ட் நிறுவனத்தின் இந்திய ஒப்பந்ததாரர் யார் என்றே தெரியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது. அதாவது டசால்ட் நிறுவனம் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது குறித்து தங்களுக்கு தெரியாது என்று கூறியது.
- மிக முக்கியமாக தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி அறிக்கையில், காங்கிரஸ் ஒப்பந்தத்தை விட பாஜக ஆட்சியில் செய்யப்பட்ட ஒப்பந்தம் விலை குறைவானது என்று கூறப்பட்டது.
இன்று தீர்ப்பு
இவ்வளவு பரபரப்பான வாதங்களுடன் இந்த வழக்கு விசாரணை முடித்துள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் கேஎம் ஜோசப், எஸ்கே கவுல் அமர்வு இந்த விசாரணையை நடத்தியது. இதில் நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணை தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கிவிட்டது. இதற்கு எதிரான மறுசீராய்வு மனுக்கள் மீதான தீர்ப்பு இன்று அளிக்கப்பட உள்ளது.