சர்வ மத பூஜையுடன் 5 ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைப்பு
ஐந்து ரஃபேல் போர் விமானங்கள் இன்று பாரம்பரிய முறைப்படி பூஜை செய்யப்பட்டு இந்திய விமானப்படையில் முறைப்படி இணைக்கப்பட்டன.
அம்பாலா: ரஃபேல் போர் விமானங்கள் இந்திய விமானப் படையில் இன்று முறைப்படி இணைக்கப்பட்டன. அம்பாலா விமான தளத்தில் பாரம்பரிய முறைப்படி சர்வ தர்மா பூஜையுடன் விமானங்களை இணைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அம்பாலாவில் நடைபெறும் ரஃபேல் விமானங்கள் இணைப்பு நிகழ்ச்சியில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், விமானப்படைத் தளபதி பதவுரியா, பிரான்ஸ் பாதுகாப்புத்துறை அமைச்சர் புளோரன்ஸ் பார்லி தலைமையிலான குழுவினர் பங்கேற்றனர்.
கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்தியா மற்றும் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் விமான நிறுவனத்துடன், 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. மொத்த மதிப்பு ரூ. 59,000 கோடியாகும். ஒவ்வொரு ஆண்டும் 12 விமானங்கள் என்ற வீதம் அனுப்பி வைக்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் சாராம்சம்.
தாக்குதல் ரகத்தை சேர்ந்த இந்த 36 விமானங்களில் 6 விமானங்கள் பயிற்சி விமானங்கள் அவற்றிலும் பிற விமானங்களில் இருப்பதுபோன்ற அனைத்து அம்சங்களும் இருக்கும். இந்த 36 விமானங்களும் 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் வழங்க வேண்டும் என்பது ஒப்பந்தத்தின் விதி.
ரஃபேல் போர் விமானங்கள் முறைப்படி நாளை விமானப் படையில் இணைப்பு- பிரான்ஸ் அமைச்சர் பங்கேற்கிறார்
இதில் முதல் 10 விமானங்களின் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்ததை அடுத்து இந்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரான்ஸ் சென்று விமானங்களுக்கு பூஜை செய்து விட்டு வந்தார். இதில் 5 விமானங்கள் பயிற்சிக்காக பிரான்ஸ் நாட்டிலேயே இருக்கும். மீதமுள்ள 5 விமானங்கள் கடந்த ஜூலை மாதம் இந்தியாவிற்கு வந்தன. அம்பாலா விமானப்படை விமான நிலையத்தில் 5 ரஃபேல் விமானங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
ஏர் சுப்பீரியாரிட்டி வகையை சேர்ந்த ரபேல் விமானம் ஸ்நெக்மா எம்-88-2 டர்போஃபேன் என்ற இரட்டை எஞ்சின்களை கொண்டிருப்பதால், அனைத்து காலநிலைகளிலும் சிறப்பான செயல்திறனை வெளிப்படுத்துவதோடு, மேம்படுத்தப்பட்ட ஆயுதங்கள், அதிக பாதுகாப்பு திறன் கொண்டதாகவும் விளங்குகிறது.
ரஃபேல் விமானங்கள் வானிலிருந்து தரை இலக்குகளையும், வான் இலக்குகளையும் தாக்கும் திறன் கொண்டது. பார்வைக்கு அப்பால் உள்ள இலக்குகளைக் குறிவைக்கும் திறன் கொண்ட ஏவுகணைகள் மட்டுமின்றி, மல்டி மிஷன் மற்றும் டீப் ஸ்ட்ரைக் குரூஸ் ஏவுகணைகள் போன்றவற்றை தாங்கிச் செல்லும் திறனையும் பெற்றுள்ளன.
வானிலிருந்து தாக்கக்கூடிய ஏவுகணைகள், 120 கிலோமீட்டர் தொலைவில் இருந்தும் இலக்கை குறிபார்த்து தாக்கக்கூடிய ஏவுகணைகள், சுமார் 600 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தாலும் வானில் இருந்தபடி தரையில் உள்ள இலக்குகளை குறிவைத்து தகர்க்க கூடிய ஏவுகணைகள் போன்றவை இதில் அடங்கும். இந்த ஏவுகணைகளை ரஃபேல் விமானங்களில் பொருத்திக்கொண்டு எதிரிகளின் இலக்குகளை தாக்கி அழிக்க முடியும்.
ஐந்து ரஃபேல் விமானங்கள் இன்று முறைப்படி இன்று இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன. நிகழ்ச்சியின் போது அனைத்து மத பூஜைகளும் நடைபெற்றன. இந்தியா சீனா எல்லையில் பதற்றம் நிலவும் இந்த சூழ்நிலையில் 5 போர் விமானங்கள் இன்று முதல் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டன. இதன்மூலம் இந்திய விமானப்படை மிகவும் பலம் பொருந்திய விமான படையாக உயர்ந்துள்ளது.
ரஃபேல், தேஜஸ் விமானங்களின் சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து இந்தியா பிரான்ஸ் அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.