வருது வருது விலகு விலகு விமானப்படைக்கு பிரான்சில் இருந்து ரபேல் போர் விமானங்கள் வருது!
பெங்களூர்: 36 ரபேல் போர் விமானங்களை வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் இந்தியா-பிரான்ஸ் இடையே கையெழுத்தாகியுள்ளது.
நம் அண்டை நாடுகளான பாகிஸ்தானும், சீனாவும் ராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது. இந்நிலையில் பிரான்ஸைச் சேர்ந்த தஸ்ஸால்ட் ஏவியேஷனிடம் இருந்து 36 ரபேல் போர் விமானங்களை பெறுவது குறித்த ஒப்பந்தம் தற்போது கையெழுத்தாகியுள்ளது.
4.5 பில்லியன் டாலர் மதிப்பிலான இந்த விமானங்களை தஸ்ஸால்ட் இந்திய விமானப்படைக்கு அளிக்க குறைந்தது 2 ஆண்டுகளாவது ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 36 விமானங்களை வாங்குவது இந்திய விமானப்படைக்கு பலனிக்காது என்றும், கூடுதல் விமானங்களை வாங்குவது நல்லது என்றும் கூறப்படுகிறது.
ரபேல் ஒப்பந்தத்தில் இருந்து ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்டை வெளியேற்ற தனியார் நிறுவனம் ஒன்று பெருமுயற்சி செய்கிறபோதிலும் அதை மோடி அரசு ஏற்காது என்று விவரம் அறிந்த வட்டாரம் தெரிவித்துள்ளது.
இது குறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
கூடுதலாக ரபேல் விமானங்கள் வேண்டும் என்றால் அதற்குரிய ஆர்டரை ஹெச்ஏஎல் மூலமாகத் தான் அளிக்க முடியும். அதன் பிறகு ரபேல் போர் விமானங்களை ஹெச்ஏஎல் தயாரித்து அளிக்கும் என்றார்.
36 ரபேல் போர் விமானங்களை வாங்குவது பிரான்ஸுடனான உறவை மேம்படுத்தத்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் விமானப்படை அதிகாரி ஒருவர் கூறுகையில்,
முதலில் பெறப்பட்ட டெண்டர்படி 20 பில்லியன் டாலர் மதிப்பில் 126 ரபேல் விமானங்கள் பிரான்ஸிடம் இருந்து வாங்குவதாக இருந்தது. அந்த ஒப்பந்தத்தின் முடிவு அரசு கையில் உள்ளது என்றார்.
ரபேல் விமானங்களை தயாரிக்கும் அளவுக்கு ஹெச்ஏஎல்லிடம் திறமை உள்ளது. ரபேல் விமானங்கள் தயாரிப்பு குறித்து அறிய நம் என்ஜினியர்கள் தஸ்ஸால்டுக்கு சென்று பார்த்துள்ளனர் என்று ஹெச்ஏஎல் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.