ராகிங் கொடுமையால் தற்கொலைக்கு முயன்ற அமைச்சர் மகன் - 3 மாணவர்கள் உட்பட 5 பேர் கைது
குவாலியர்: பீகார் மாநில அமைச்சரின் மகன் ராகிங் கொடுமையால் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக பள்ளி மாணவர்கள் மூன்று பேர் உட்பட ஐந்து பேரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
பீகாரில் கூட்டுறவுத் துறை அமைச்சராக இருப்பர் ஜெய்குமார் சிங். இவரின் 14 வயது மகன் ஆதர்ஷ் சிங் மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் நகரில் உள்ள பள்ளி ஒன்றில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான்.
கடந்த, 20ம் தேதி விடுதியில் மயங்கி நிலையில் மீட்கப்பட்ட ஆதர்ஷ் சிகிச்சைக்காக பள்ளி நிர்வாகத்தால் மருத்துவமனையில் சேர்க்கப் பட்டான். அங்கு சிறுவனது உடல் நிலை மோசமானதை அடுத்து, டெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளான் ஆதர்ஷ்.
இது தொடர்பாக தகவலறிந்து விரைந்து வந்த அமைச்சர் ஜெய்குமார் சிங் பள்ளி விடுதியில் நிகழ்ந்த 'ராகிங்' கொடுமையே மகனின் இந்த நிலைமைக்கு காரணம் என புகார் தெரிவித்தார். ஆனால், பள்ளி நிர்வாகம் தரப்பில் மாணவர் தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்பட்டது.
பிரச்னை பெரிதானதை அடுத்து துணை கலெக்டர் மற்றும் போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில் ஆதர்ஷ் சிங்கை சில இழிவான வேலைகளை செய்யும்படி செல்வாக்குமிக்க குடும்பத்தைச் சேர்ந்த சீனியர் மாணவர்கள் சிலர் துன்புறுத்தியதும் அதனால் மன உளைச்சல் அடைந்த மாணவன் தற்கொலைக்கு முயன்றதும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து ஆதர்ஷை ராகிங் செய்த 3 சீனியர் மாணவர்கள் பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும், அவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக பள்ளி ஊழியர்கள் இருவரும் பணியிலிருந்து நீக்கப்பட்டனர்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப் பட்டனர்.