ரகுராம் ராஜனையும் அரவிந்த் சுப்ரமணியனையும் அமெரிக்கா நம்மீது திணித்துவிட்டது... சொல்வது சு.சுவாமி
டெல்லி: ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோரை அமெரிக்கா நம் மீது திணித்துவிட்டது என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சாடியுள்ளார்.
மத்திய நிதி அமைச்சர் அருண்ஜேட்லி ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்ரமணியன் ஆகியோரைத் தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார் சுப்பிரமணியன் சுவாமி. இவரது குடைச்சலால்தான் தாம் 2-வது முறையாக ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியைக் கோரப்போவதில்லை என ரகுராம் ராஜன் அறிவித்திருந்தார்.
சுப்பிரமணியன் சுவாமியின் நெருக்கடியால் நிதி அமைச்சர் அருண்ஜேட்லி கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மீண்டும் தமது ட்விட்டர் யுத்தத்தை கையில் எடுத்திருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.
The Americans foisted on us management degree holders like R3 and AS. Management types are micro minded while economy is general equilibrium
— Subramanian Swamy (@Swamy39) August 25, 2016
இன்று ட்விட்டரில், ரகுராம் ராஜன் மற்றும் அரவிந்த் சுப்ரமணியன் போன்ற நிர்வாகவியல் பட்டம் பெற்ற நபர்களை அமெரிக்கா, இந்தியா மீது திணித்தது. பொருளாதாரம் சமநிலையில் இருந்த போது நிர்வாகம் குறுகிய மனப்பான்மை கொண்டதாக இருந்தது என்றெல்லாம் சாடியுள்ளார்.
சுப்பிரமணியன் சுவாமியைப் பொறுத்தவரையில் நிதி அமைச்சர் பதவியை கைப்பற்றுவது என்பதுதான் இலக்கு. இதற்காகவே தொடர்ந்து நிதி அமைச்சர் முதல் அதிகாரிகள் அனைவரையும் விளாசி வருகிறார்.