முன்னாள் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனுக்கு நோபல் பரிசு?
டெல்லி: ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு கிடைக்கக்கூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற வாய்ப்புள்ளவர்கள் பட்டியலில் ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனின் பெயர் உள்ளது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
கிளேரிவேட் நிறுவனம் தயாரித்துள்ள அந்த பட்டியலில் ரகுராம் ராஜன் உள்பட 6 பேரின் பெயர்கள் உள்ளது. பட்டியலில் இடம்பிடித்ததால் ரகுராம் ராஜனுக்கு கண்டிப்பாக நோபல் பரிசு கிடைக்கும் என்று கூற முடியாது.
ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்த ரகுராம் ராஜனின் பதவிக்காலம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 4ம் தேதியும் முடிந்தது. அவர் பொருளாதாரம் குறித்து பல புத்தகங்கள் எழுதியுள்ளார்.
2008ம் ஆண்டு அமெரிக்க பெருளாதாரம் பெரும் சரிவை சந்திக்கும் என்று ரகுராம் ராஜன் கணித்தார். அவர் கணித்தது போன்றே நடந்துவிட்டது. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு நாளை அறிவிக்கப்படுகிறது.
ஐ.எம்.எஃப். அமைப்பின் தலைமை பொருளாதார நிபுணராக நியமிக்கப்பட்ட முதல் மேற்கத்திய நாடுகளை சேராத மற்றும் இளம் நபர் ரகுராம் ராஜன் என்பது குறிப்பிடத்தக்கத்து.