ராகுல்காந்தி காங். தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர் - 'விளாசும்' பர்கா சுக்லா சிங்
ராகுல்காந்தி தலைவராக இருப்பதற்கு கொஞ்சமும் தகுதியற்றவர் என முன்னாள் டெல்லி காங்கிரஸ் மகளிர் அணித் தலைவர் பர்கா சுக்லா சிங் சாடியுள்ளார்.
டெல்லி: காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைவராக இருப்பதற்கு தகுதியற்றவர் என காங்கிரஸ் கட்சியை விட்டு விலகியுள்ள பர்கா சுக்லா சிங் சாடியுள்ளார்.
டெல்லி காங்கிரஸ் மகளிர் அணித் தலைவராகவும் டெல்லி பெண்கள் ஆணையத்தின் முன்னாள் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் பர்கா சுக்லா சிங். இவர் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர்.
இவர் தற்போது காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா குறித்த செய்தியாளர்கள் சந்திப்பில், காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஒரு தலைவராக இருப்பதற்குத் தகுதியற்றவர்' என சாடினார். மேலும், '45 வயதான காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஏன் மூத்த தலைவர்களைச் சந்திக்காமல் ஒளிந்துகொள்கிறார்?' என கடுமையாகப் பேசினார்.
அதுமட்டுமில்லாமல் காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான் மீதும் குற்றச்சாட்டுக்களைக் கூறினார். அஜய் மக்கான், ஒரு மூத்த தலைவராக இருந்துகொண்டு, மகளிர் அணியில் இருக்கும் பெண்களுடன் தவறாக நடந்துகொள்கிறார் என குற்றம்சாட்டினார்.
டெல்லி காங்கிரஸ் தலைவராக இருந்த அர்விந்தர் சிங் லவ்லி, காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தார். அதுபோல பர்கா சுக்லா சிங்க்கும் பாஜகவில் இணையலாம் என கூறப்படுகிறது.