ஏப்ரல் மாதம் காங்கிரஸ் தலைவர் ஆகும் ராகுல் காந்தி
டெல்லி: வரும் ஏப்ரல் மாதம் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.
மார்ச் 28ம் தேதியில் இருந்து ஏப்ரல் 15ம் தேதிக்குள் அனைத்து இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தை கூட்ட அக்கட்சி முடிவு செய்துள்ளது. இனியும் புதிய தலைவர் நியமனத்தை தள்ளிப் போடக் கூடாது என்று கட்சியினர் நினைக்கிறார்கள்.
அந்த கூட்டத்தில் ராகுல் காந்தி கட்சியின் தலைவராக நியமிக்கப்பட உள்ளார் என்று கூறப்படுகிறது.
கோஷ்டி
லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்த பிறகு அக்கட்சியில் பல கோஷ்டிகள் உருவாகிவிட்டது. அதில் ஒரு கோஷ்டி, சோனியாவே தொடர்ந்து தலைவராக இருக்க வேண்டும் என்றும், ராகுலுக்கு தலைவர் பொறுப்பை அளித்து அவரை சிரமப்படுத்தக் கூடாது என்றும் தெரிவித்துள்ளது.
தாமதம்
ராகுலை ஏப்ரல் மாதம் தலைவர் ஆக்கியே தீர வேண்டும். இதை மேலும் தாமதம் செய்தால் பல பிரச்சனைகள் தான் ஏற்படும் என்கிறது மற்றொரு கோஷ்டி.
சோனியா, ராகுல்
சோனியா, ராகுல் என கட்சியில் இரண்டு அதிகாரம் படைத்தவர்கள் இருப்பது குழப்பத்தை ஏற்படுத்துவதுடன், முடிவுகள் எடுப்பதிலும் கால தாமதம் ஆகிறது. அதனால் ராகுலை உடனே தலைவர் ஆக்க வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் மற்றும் எம்.பி. கமல் நாத் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
சோனியா
ராகுலை தலைவர் ஆக்கும் முன்பு கட்சியின் வொர்க்கிங் தலைவராக ஆக்க வேண்டும் என்று சிலர் சோனியா காந்தியிடம் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் சோனியா அந்த பரிந்துரையை ஏற்க மறுத்துவிட்டார்.