பண ஒழிப்பு விவகாரத்துக்கு தேர்தலில் பாஜகவை மக்கள் பழிவாங்குவர்!- ராகுல், அகிலேஷ்
லக்னோ: ரூ 1000, 500 நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவை எடுத்ததற்காக உத்தரப் பிரதேச தேர்தலில் பாஜகவை மக்கள் பழிவாங்குவர் என்று காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியும், உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவும் கூறினர்.
உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியில் ராகுல் காந்தியும், அகிலேஷ் யாதவும் தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஞாயிற்றுக்கிழமை பிரசாரம் செய்தனர். அப்போது ராகுல் காந்தி பேசியதாவது:
அகிலேஷ் யாதவுடன் நான் கூட்டணி வைத்தபிறகு, பிரதமரின் மனநிலை மாறிவிட்டது. அவரது முகத்தில் இருந்த புன்னகை தற்போது ஆவியாகி மறைந்துவிட்டது.
உத்தரப் பிரதேசத்தில் காங்கிரஸும், சமாஜவாதியும் சேர்ந்து ஆட்சியமைக்கும். பீகார் தேர்தலுக்குப் பிறகு, அந்த மாநிலம் குறித்து மோடி ஒருமுறை கூடப் பேசவில்லை. அதேபோல்தான், உத்தரப் பிரதேசம் குறித்தும் 2019-ஆம் ஆண்டு வரையிலும் அவர் பேசமாட்டார். உத்தரப் பிரதேசத்தை மறந்துவிடுவார்.
நல்ல காலம் குறித்த படத்தை காண்பித்த அவர், தற்போது ஷோலே ஹிந்திப் படத்தின் கப்பர் சிங் கதாபாத்திரம் போல நடிக்கிறார்.
ஊழலுக்கு எதிராக தாம் போராட விரும்புவதாக தெரிவிக்கிறார். மக்களின் கைகளில் இருந்த பணத்தை வெறும் தாளாக அவர் மாற்றிவிட்டார். இதற்கு மக்கள் தற்போது பழிவாங்கப் போகின்றனர்.
உத்தரப் பிரதேசத்தில் 30 நாள் யாத்திரை முடிந்து பிரதமரை நான் சந்தித்துப் பேசினேன். அப்போது விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். அதற்கு அவர் பதிலளிக்கவில்லை. மௌனமாக இருந்து விட்டார்.
ஆனால், தற்போது தேர்தல் பிரசாரத்தின்போது தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதும், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யும் என்று தெரிவிக்கிறார். தேர்தலில் வெற்றி பெற்றால்தான் இதைச் செய்ய வேண்டுமா... மோடி அவர்களே, நீங்கள் நாட்டின் பிரதமர். அமைச்சரவையைக் கூட்டி உடனே விவசாயிகள் கடன்களை ரத்து செய்யுங்கள்," என்றார்.
அகிலேஷ் யாதவ்
தொடர்ந்து, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் பேசுகையில், "உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் முடிவை எடுத்ததன் மூலம், பாமர மக்களை ஏடிஎம் மையங்களின் முன்பு வரிசையில் பாஜக நிற்க வைத்துவிட்டது. எனவே, தேர்தலில் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்க மக்கள் வரிசையில் நிற்கின்றனர்.
உத்தரப் பிரதேச சட்டப் பேரவைத் தேர்தலின் 3-ஆவது, 4-ஆவது கட்ட வாக்குப்பதிவு முடிந்ததும், மக்களின் மனநிலையை அக்கட்சி தெரிந்து கொள்ளும். அப்போது பாஜக தலைவர்களின் ரத்த அழுத்தத்தை பரிசோதிக்க வேண்டியிருக்கும்.
உத்தரப் பிரதேச மக்கள், பகுஜன் சமாஜ் கட்சிக்கு தேர்தலில் வாக்களிக்கக் கூடாது. அக்கட்சி மீது மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில், இதற்கு முன்பு தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் அக்கட்சி சேர்ந்து கொண்டது.
புந்தேல்கண்ட் பகுதியில் வறட்சி நிலவியபோது மத்திய அரசு, இப்பகுதிக்கு வெற்று ரயிலையே அனுப்பியது. தண்ணீர் அளிக்கவில்லை. அப்போது மாநில அரசுதான் மக்களுக்கு உதவியாக வந்தது," என்றார்.