பிரச்சார பீரங்கியாக விஜயசாந்தியா.. உள்ளூர் காங்கிரசார் புகைச்சல்
பிரச்சார பீரங்கியாக விஜயசாந்தி நியமனத்தால் குமுறல் வெளிப்படுகிறது,
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலத்தில், காங்கிரசின் பிரசார பீரங்கியாக நடிகை விஜயசாந்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அக்கட்சியின் தலைவர் ராகுல் வெளியிட்டுள்ளார்.
தெலுங்கானா மாநில சட்ட சபை கலைக்கப்பட்டு அங்கு விரைவில் விரைவில் தேர்தல் வர இருக்கிறது. அப்படி தேர்தல் நடைபெற்றுவிட்டால் கண்டிப்பாக சந்திரசேகரராவ்தான் வெற்றி பெற அதிகமாகவே சாத்தியக்கூறுகள் உள்ளன. ஏனென்றால் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சிக்கு பாஜக பெரும் ஆதரவு அளிக்கும் என கூறப்படுகிறது.
ராகுல் புதிய வியூகம்
அப்படி சந்திரசேகரராவ் வெற்றி பெற்றுவிட்டால் காங்கிரசின் நிலை இன்னும் மோசமாகி விடும். இதனால் தெலுங்கானா தேர்தலை காங்கிரஸ் கட்சியும் எதிர்கொள்ள பல்வேறு யூகங்களை அமைத்து வருகிறது. அதனால் புதிய புதிய கமிட்டிகளை ராகுல்காந்தி உருவாக்கினார். இதனால் தெலுங்கானா காங்கிரசார் உற்சாகமாவார்கள் என்றும் ராகுல் கணித்தார்.
பிரச்சார பீரங்கி
அதன்படி 10 குழுக்களை ராகுல்காந்தி உருவாக்கி இருக்கிறார். இதில் ஒன்றாகதான் விஜயசாந்திக்கு பிரசார பீரங்கியாக பொறுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விஜயசாந்தி தெலுங்கானா பிரசார களத்தில் நட்சத்திர பேச்சாளர் அந்தஸ்துடன் பிரசாரத்தில் ஈடுபடுவார் என்றும் அறிவித்துவிட்டார்.
மேடக்-எம்.பி.
ஆனால் இதற்கு உள்ளூர் காங்கிரசாருக்கு புகைச்சலை ஏற்படுத்தி உள்ளதாக தெரிகிறது. ஏனெனில் விஜயசாந்தி அரசியலுக்கு நுழைந்ததே 1988-ல்தான். அதுவும் பாஜகவில் சேர்ந்து. பிறகு அங்கிருந்தும் விலகி தல்லி தெலுங்கானா என்று தனி கட்சி தொடங்கினார். அதிலும் சரிப்பட்டவில்லை என்பதால் தனிக் கட்சியை கொண்டு வந்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியுடன் இணைத்தார்.
உள்ளூர் காங்கிரசார்
ஆனால் அங்கேயும் சண்டைபோட்டுக் கொண்டு, காங்கிரசில் வந்து சேர்ந்தார். ஆனால் காங்கிரசிலும் பெரிய செயல்பாடு எதுவும் விஜயசாந்திக்கு இல்லை என்றுதான் கூற வேண்டும். இவ்வளவு நாள் விஜயசாந்தி எங்கே இருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என்றே தெரியாத நிலையில், இப்போது திடீரென ஒரு தேசிய கட்சியின் பிரசார கட்சியின் பீரங்கியாக ராகுல் அறிவித்துள்ளார் என்றும், தங்களை ராகுல் கலந்து ஆலோசிக்காமலேயே இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளதாகவும் உள்ளூர் காங்கிரசார் வருத்தம் தெரிவித்துள்ளனர்.