மகாராஷ்டிராவில் ராகுல்: விவசாயிகள் நிலைமையை அறிய பாதயாத்திரை தொடங்கினார்!!
நாக்பூர்: விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வலியுறுத்தி மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று பாதயாத்திரை தொடங்கினார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி. இந்த பாதயாத்திரையின் போது தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பங்களை அவர் சந்தித்து ஆறுதல் கூறுகிறார்.
காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி 56 நாட்கள் லீவ் போட்டுவிட்டு 'எங்கோ' ஒரு நாட்டுக்குப் போய்விட்டு வந்தார்.. அதன் பின்னர் அவரது நடவடிக்கைகள் படு சுறுசுறுப்பாக இருக்கின்றன..
நாடாளுமன்றத்தில் நில ஆர்ஜித மசோதா, நெட் நியூட்டிராலிட்டி விவகாரங்களை கையிலெடுத்து மோடி அரசை போட்டுத் தாக்கினார். பின்னர் பஞ்சாப் மாநிலத்துக்கு சக பயணிகளுடன் ரயிலில் பயணம் மேற்கொண்டு விவசாயிகள் குறைகளைக் கேட்டார். மறுநாள் லோக்சபாவில் விவசாயிகள் விவகாரத்தை கையிலெடுத்துக் கொண்டு வெளுத்து வாங்கினார்.
இதனைத் தொடர்ந்து விவசாயிகள் அதிகளவில் தற்கொலை செய்து கொள்ளும் மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதயாத்திரை நடத்துவதற்காக நேற்று நாக்பூர் வந்தடைந்தார் ராகுல். இன்று காலை விதர்பா பிராந்தியத்தில் குன்ஜி என்ற கிராமத்தில் இருந்து தனது பாதயாத்திரையை அவர் தொடங்கினார்.
இப்பகுதியில்தான் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இன்றைய பாதயாத்திரையின் போது தற்கொலை செய்த விவசாயிகளின் குடும்பங்களை ராகுல் காந்தி சந்திக்க இருக்கிறார்.. அவருடன் காங்கிரஸ் தலைவர்கள் பலரும் பாதயாத்திரையில் கலந்து கொண்டுள்ளனர்.