விரைவில் சோனியாவிற்கு ‘லீவு’ தந்து விட்டு காங். தலைவராகிறார் ராகுல் ?
டெல்லி: ஏப்ரல் மாதம் நடைபெறும் அனைத்து இந்திய காங்கிரஸ் குழு கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை, துணைத் தலைவரான ராகுல் ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த 1998ம் ஆண்டு முதல் காங்கிரசின் தலைவராக பதவி வகித்து வருகிறார் சோனியாகாந்தி. சமீப காலமாக மக்களிடம் நற்மதிப்பை இழந்து வரும் காங்கிரஸ், லோக்சபா தேர்தல் உள்பட அனைத்து தேர்தல்களிலும் தொடர்ந்து தோல்வியைத் தழுவி வருகிறது. இதனால், கட்சியின் தலைமையை மாற்ற முடிவு செய்யப் பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, தற்போது காங்கிரஸின் துணைத் தலைவராக உள்ள ராகுல்காந்தியை, அடுத்த தலைவராக்க சோனியா முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஆனால், சோனியாவின் இம்முடிவிற்கு கட்சிக்குள்ளாகவே எதிர்ப்பு வலுத்துள்ளதாகவும், அதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே ராகுல் ஓய்வில் சென்றிருப்பதாகவும் காங்கிரஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், எப்படியும் தடைகளை மீறி மகனை தலைமைப் பதவியில் அமர்த்தி விட சோனியா முடிவெடுத்திருப்பதாகத் தெரிகிறது. ஏப்ரல் மாதம் நடைபெறும் அனைத்து இந்திய காங்கிரஸ் குழுக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் அறிவிக்கப் பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.