2019 தேர்தல் மட்டுமல்ல அதற்கு முந்தைய தேர்தல்களிலும் வெல்வோம்... ராகுல் காந்தி சபதம்!
அடுத்த ஆண்டு நடக்க நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் அதற்கு முன் நடக்கும் அனைத்து சட்டசபை தேர்தல்களிலும் வெல்வோம் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
டெல்லி : 2019ல் நடக்கும் நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல, அதற்கு முன் நடக்கும் அனைத்து தேர்தல்களிலும் காங்கிரஸ் கண்டிப்பாக வெற்றிபெறும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
2019ல் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான தேர்தல் முன்னோட்டமாக, மக்களின் கோபம் எனப்படும் ஜன் ஆக்ரோஷ் பேரணி டெல்லியில் இன்று நடந்தது. இதில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அவருடைய தாய் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்பட பல காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், இந்த நாட்டில் தற்போது அனைத்து துறைகளும் மிகவும் பலவீனமாக உள்ளன. விவசாயிகள் மோசமான நிலையில் உள்ளனர். காங்கிரஸ் ஆட்சி இல்லாததால்தான், நாடு இந்த நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. நான் எங்கு சென்றாலும், யாரை சந்தித்தாலும், நீங்கள் சந்தோஷமாக இருக்கிறீர்களா என்று கேட்பேன். இதுவரை இல்லை என்று தான் எனக்கு பதில் வந்துள்ளது என்றார்.
பாஜக அரசு மீது மக்கள் மிகுந்த கோபத்தில் உள்ளனர். அடுத்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல அதற்கு முன் நடக்கும் கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேச சட்டசபை தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என்று ராகுல் காந்தி சபதம் எடுத்தார்.