காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு மூத்த தலைவர்கள் ஆசியோடு வேட்புமனு தாக்கல் செய்த ராகுல் காந்தி
காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி : டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி.
தற்போதைய காங்கிரஸ் தலைவரான சோனியா காந்தியின் பதவிக்காலம் முடிவுபெற உள்ளதால், காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இதில் போட்டியிட காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி இன்று காலை 10.30 மணியளவில் தலைமை அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்யும் முன்பு காங்கிரஸின் மூத்த தலைவர்கள் மன்மோகன் சிங், பிராணப் முகர்ஜி, குலாம் நபி ஆசாத் , ப.சிதம்பரம், அகமது பட்டேல், ஷீலா தீக்ஷித் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களிடம் ஆசி பெற்றார் ராகுல்காந்தி. காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் பலர் தலைமை அலுவலகம் முன் குவிந்து ராகுலுக்கு ஆதரவாக கோஷமிட்டு வருகிறார்கள்.
Delhi: Rahul Gandhi at AICC HQ,files nomination for Congress President pic.twitter.com/QUHFFtHNXb
— ANI (@ANI) December 4, 2017
5 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் துணைத்தலைவராக செயல்பட்டு வந்த ராகுல் காந்தி, தலைவராக இதுவே சரியான தருணம் என்று பல தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர். வரவிருக்கும் 2019ம் ஆண்டிற்கான நாடாளுமன்றத் தேர்தலை வைத்தே காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்து உள்ளனர்.
தற்போது காங்கிரஸ் தலைவராக இருக்கும் சோனியா காந்தி 1998ம் ஆண்டில் இருந்து 19 ஆண்டுகளாக தலைவராக இருக்கிறார். தற்போது உடல்நிலை பாதிக்கப்பட்டு இருக்கும் சோனியா காந்தி, பிரமாணப் பத்திரத்தில் ராகுல் காந்தியை முன்மொழிந்து உள்ளார். அவருக்கு அடுத்ததாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராகுல் காந்தியை முன்மொழிந்து உள்ளார்.
வெள்ளிக்கிழமையே காங்கிரஸ் தலைவர் பதவிக்காக வேட்புமனுத்தாக்கல் தொடங்கிவிட்டாலும் இதுவரை யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. ராகுல் காந்தியை தவிர யாரும் வேட்புமனு தாக்கல் செய்யமாட்டார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருந்தால், தேர்தல் இல்லாமலே ராகுல் காந்தி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று காங்கிரஸ் தலைமை அலுவலக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.