அமேதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்காந்தி
அமேதி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அமேதி லோக்சபா தொகுதியில் , தனது குடும்பத்தினருடன் வந்து வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.
உ.பி மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். அதே மாநிலத்தில் உள்ள ரேபரேலி தொகுதியில் அண்மையில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வேட்பு மனு தாக்கல் செய்தார்.
வேட்புமனு தாக்கல் செய்வதற்காக இன்று உ.பி. மாநிலம் சுல்தான்பூர் வந்திறங்கிய ராகுல் காந்திக்கு காங்கிரசார் இன்று உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ஊர்வலமாக ராகுல் காந்தி அமேதி நோக்கி அழைத்து செல்லப்பட்டார்.
அவருடன், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவரது மகள் பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதேரா ஆகியோரும் உடன் வந்தனர்.
பின்னர், ராகுல் காந்தி தனது வேட்பு மனுவை தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்தார்.
வேட்பு மனு தாக்கல் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல், "அமேதி தொகுதி தனது குடும்பம் போன்றது. இங்கு நான் நிச்சயம் வெற்றி பெறுவேன். அமேதி தொகுதிக்கு ஏராளமான வளர்ச்சி பணிகளை செய்துள்ளேன். பெண்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க பாடுபட்டுள்ளேன்" என்று கூறினார்.