காங். பிரதமர் வேட்பாளர் ராகுல் காந்திதான்: வீரப்ப மொய்லி
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர், ராகுல் காந்திதான் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும், அக்கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீரப்ப மொய்லி அறிவித்துள்ளார்.
கடந்த இருதினங்களுக்கு முன்பு சுற்றுச் சூழல் துறை அமைச்சர் பதவியிலிருந்து ஜெயந்தி நடராஜன் விலகியதை தொடர்ந்து, அவரது இலாகாவை கூடுதல் பொறுப்பாக வீரப்ப மொய்லி கவனித்துக்கொள்வார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி அந்த இலாகாவுக்கான அமைச்சர் பொறுப்பை மொய்லி இன்று ஏற்றுக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்திதான் அதில் எந்தவித மாற்றமும் இல்லை என்றார். மேலும் பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை கடுமையாக தாக்கிய மொய்லி, அவர் அளவுக்கு அதிகமாக பேசுவதாகவும், ஆனால் செயலில் காட்டுவது நாங்கள்தான் என்றும் கூறினார்.
காங்கிரஸ் தோல்வி
நடந்து முடிந்த டெல்லி, ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோராம் ஆகிய மாநில சட்டசபை தேர்தல்களில், மிசோராம் தவிர்த்து மீதமுள்ள 4 மாநிலங்களில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 2014 ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெற உள்ள நிலையில், இந்த தோல்வி காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
மோடி அலை
மோடியை பிரதமர் வேட்பாளராக பாஜக அறிவித்ததே அக்கட்சி அண்மையில் நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற முக்கிய காரணமாக அமைந்ததாக காங்கிரஸ் கருதுகிறது. எனவே மோடிக்கு சவால் விடக் கூடிய வகையில் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை நிறுத்தலாம் என்றும், இதனை நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே வெளியிட்டு, பிரசாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மேலிடத்தை, சோனியாவுக்கு விசுவாசமான அக்கட்சியின் இரண்டாம் மட்ட தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
காங்கிரஸ் கமிட்டி கூட்டம்
இதனைத் தொடர்ந்து இது தொடர்பாக விவாதித்து முடிவை அறிவிப்பதற்காக, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டம் வருகிற ஜனவரி 17 ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீரப்ப மொய்லி
ஜனவரி 17 ல் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு முன்னதாகவே ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என மத்திய அமைச்சர் வீரப்ப மொய்லி இன்று அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.