ராகுல் காந்தி மீண்டும் வெளிநாடு பயணம்
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி ஓய்வுக்காக வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால் அவர் எந்த நாட்டுக்குச் செல்கிறார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை.
காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஞாயிற்றுக்கிழமை தனது 46-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு காங்கிரஸ் தொண்டர்கள், தலைவர்கள், பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், தி.மு.க. தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில் ராகுல்காந்தி நேற்று முன்தினம் இரவு திடீரென வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார் ராகுல். இந்த தகவலை அவரே உறுதி செய்தார். இதுகுறித்து அவர் டுவிட்டர் செய்தியில், எனது பிறந்த நாளில் என்மீது நீங்கள் காட்டிய உண்மையான அன்புக்கு நன்றி.
என்னை நேரில் சந்தித்தவர்களுக்கும், வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி கூறுகிறேன். நான் குறுகிய பயணமாக சில நாட்களுக்கு வெளிநாடு செல்கிறேன் என்று குறிப்பிட்டு உள்ளார். எனினும், அவர் எந்த நாட்டுக்கு சென்றார் என்பது தெரியவில்லை.
கடந்த ஆண்டு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்ற போது, அதில் பங்கேற்காமல் 56 நாட்கள் விடுப்பில் வெளிநாட்டுக்கு சென்றார். ராகுல் எங்கே எங்கே என்று எதிர்கட்சியினர் கேட்டபோது எல்லாம் அவர் விரைவில் வருவார் இந்திய அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்று காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்து வந்தனர்.
இந்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. விடுப்பில் இருந்து திரும்பிய பிறகு ராகுல் காந்தியிடம் ஏகப்பட்ட மாற்றங்கள் தெரிந்ததை பார்த்து காங்கிரஸ் கட்சியினர் வியந்தனர். அதேபோல் இந்த முறை ஏதாவது மாற்றம் நிகழலாம் என காங்கிரஸ் கட்சியினர் எதிர்பார்க்கின்றனர்.