ரோஹித் தற்கொலைக்கு நீதி கேட்டு ஹைதராபாத் பல்கலை வளாகத்தில் உண்ணாவிரதம்- ராகுல் காந்தியும் பங்கேற்பு
ஹைதராபாத்: தலித் மாணவர் ரோகித் வெமுலா தற்கொலைக்கு நீதி கேட்டு ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழக வளாகத்தில் இன்று நடைபெற்று வரும் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார்.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் தற்கொலை செய்துகொண்ட தலித் மாணவர் ரோஹித் வெமுலாவின் மரணத்துக்கு நியாயம்கோரி பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாணவர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் நேற்றிரவு ஹைதராபாத் வந்த காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி நள்ளிரவு 12 மணியளவில் உண்ணாவிரதப் பந்தலில் மாணவர்களை சந்தித்தார்.
மரணம் அடைந்த ரோஹித்தின் புகைப்படத்தின் அருகே மெழுகுவர்த்தி ஏற்றிவைத்து அஞ்சலி செலுத்திய ராகுல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடையே உரையாற்றினார். பின்னர், சுமார் இரண்டு மணி நேரம் பந்தலில் அமர்ந்திருந்தார்.
முன்னதாக ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்த ராகுல்காந்திக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏபிவிபி அமைப்பை சேர்ந்தவர்கள் பல்கலைக்கழக வளாகத்தின் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், இன்றைய உண்ணாவிரதத்திலும் ராகுல் காந்தி பங்கேற்றுள்ளார்.