ராகுல் யாத்திரையில் விபரீதம்... ஓசி கட்டில்களுக்காக அடிதடியில் இறங்கிய பொதுமக்கள் #rahul
தியோரியா: உத்தரப்பிரதேச காங்கிரஸ் துணைத் தலைவர் மேற்கொண்ட யாத்திரையில் காங்கிரசார் கொண்டு வந்த ஓசி கட்டில்களை எடுத்துச் செல்வதில் பொதுமக்களிடையே கடும் அடிதடி ஏற்பட்டது.
உத்தரபிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிப்பதற்காக சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
ராகுல் மகா யாத்திரை
இதன் ஒருபகுதியாக ராகுல் காந்தி 2,500 கி.மீ. மகா யாத்திரையை இன்று தியோரியா என்ற இடத்தில் தொடங்கினார். விவசாயிகளின் கடன் தள்ளுபடி, மின் கட்டண குறைப்பு, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் ஆகிய 3 பிரச்சினைகளை மையமாக வைத்து இந்த யாத்திரை தொடங்கப்பட்டது.
கட்டில்கள்...
இந்த பயணத்தின் போது மக்களுடன் ராகுல் காந்தியும் காங்கிரசாரும் அமர்ந்து பேசுவதற்காக ஏராளமான கட்டில்கள் கொண்டு வரப்பட்டன. தியோரியாவில் ராகுல் காந்தி யாத்திரையை முடித்ததுதான் தாமதம்...
அடிதடி
அங்கிருந்த ஆண்கள், பெண்கள் பலரும் காங்கிரசார் கொண்டு வந்திருந்த கட்டில்களை ஆளுக்கு ஒரு திசையில் தூக்கிக் கொண்டு ஓடினர். அவர்களிடமிருந்து கட்டில்களை பறித்துக் கொண்டு ஓட சிலரும் முயற்சித்தனர். இதனால் பெரும் அடிதடி நிகழ்ந்தது.
யுத்தம்
இப்படி மிகப் பெரிய கட்டில் யுத்தமே நடக்க அந்த இடமே போர்க்கள்மானது... ராகுலின் யாத்திரை மக்களிடம் வாக்குகளை வாங்குவதற்கு பதிலாக ரத்தம் சிந்தத்தான் வைத்துவிடும் போல!