சிறுமிகள் பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் மவுனம்... நள்ளிரவில் ராகுல் மெழுகுவர்த்தி பேரணி!
கத்துவா மற்றும் உனாவில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைகள் செய்யப்பட்ட விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை எழுப்பும் விதமாக ராகுல்காந்தி நள்ளிரவில் மெழுகுவர்த்தி பேரணி நடத்தினார்.
Recommended Video
டெல்லி: கத்துவா மற்றும் உனாவில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி நள்ளிரவில் மெழுகுவர்த்தி பேரணி நடத்தினார். தூங்கிக் கொண்டிருக்கும் மத்திய அரசை எழுப்பும் விதமாகவே இந்த பேரணி நடப்பதாக போராட்டத்தில் பங்கேற்றவர்கள் தெரிவித்தனர்.
ஜம்முகாஷ்மீரின் கத்துவா பகுதியில் 8 வயது காஷ்மீர் சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். அரசு அதிகாரி, காவல் அதிகாரி உள்பட 8 பேர் சிறுமி பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் கைதாகியுள்ளவர்களை விடுவிக்கக் கோரி அந்த மாநில பாஜக அமைச்சர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போன்று உத்திரபிரதேச மாநிலம் உனா நகரில் பாஜக எம்எல்ஏ மீது பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்த பெண்ணின் தந்தை போலீஸ் விசாரணையின் போது மர்மமான முறையில் மரணமடைந்தார். மனதை உலுக்கும் இந்த 2 பாலியல் வன்கொடுமை விவகாரங்களில் மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மவுனமாக உள்ளது.
உனா, கத்துவா சம்பவங்களுக்கு மத்திய அரசும், பிரதமர் நரேந்திர மோடியும் வாய் திறக்காமல் மவுனம் காப்பது ஏன் என்று எதிர்க்கட்சியான காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகிறது. இந்த இரண்டு சம்பவங்களிலுமே பாஜகவைச் சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ள நிலையில் மத்திய அரசின் மவுனம் மக்களின் கோபத்தை அதிகரிக்கச் செய்துள்ளதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.
இந்நிலையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், கத்துவா உனா சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாகவும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் டெல்லியில் நள்ளிரவில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடைபெற்றது. இந்தியா கேட் பகுதியில் நடைபெற்ற இந்தப் பேரணியில் சோனியாகாந்தி, பிரியங்கா காந்தி, அவரது கணவர் ராபர்ட் வதோதரா, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், காங்கிரஸ் தொண்டர்களும் பங்கேற்றனர். தூங்கிக்கொண்டிருக்கும் மத்திய அரசை எழுப்பவே நள்ளிரவில் போராட்டம் நடத்துகிறோம் என்று போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறினார்கள்.
இதுகுறித்து ராகுல்காந்தி செய்தியாளர்களிடம் தெரிவித்த போது, இங்கு நடக்கும் வன்முறைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. இது ஒரு தேசியப் பிரச்னை, அரசியல் பிரச்னையல்ல. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த தொண்டர்கள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டுள்ளனர். குறைந்தபட்சம் பெண்கள் பாதுகாப்பாகவாவது உணர வேண்டும் என்றும் ராகுல்காந்தி தெரிவித்தார்.