கொல்கத்தா பாலம் விபத்தை அரசியலாக்கவில்லை - உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த ராகுல்
கொல்கத்தா: கொல்கத்தாவில் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆறுதல் கூறினார்.
மத்திய கொல்கத்தாவில் போக்குவரத்து அதிகம் உள்ள கிரிஷ் பார்க் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இங்கு ஊழியர்கள் வேலை செய்துகொண்டிருந்தபோது, பாலத்தின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் பல தொழிலாளர்கள் சிக்கினர்.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசாரும், தேசிய பேரிடர் மீட்புக்குழுவை சேர்ந்த 400 க்கும் மேற்பட்ட வீரர்களும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். 70 பேருக்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தி கொல்கத்தா நகருக்கு வந்தார். இடிந்து கிடக்கும் மேம்பாலத்தை பார்வையிட்ட அவர், கொல்கத்தா நகர மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அவர், மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி அங்கு சிகிச்சை பெற்றுவருபவர்களை சந்தித்தார்.
அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை தொடர்பாக டாக்டர்களிடம் கேட்டறிந்த அவர், மேற்படி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரையும் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் ராகுல், "மேம்பாலம் இடிந்து விழுந்த கோரச் சம்பவத்தை அரசியலாக்க விரும்பவில்லை. இந்த துயரமான வேளையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்மால் இயன்ற உதவியை செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.