கரும்பலகையில் வரையப்பட்ட தாமரையை அழியுங்கள்.. ராகுல் வாக்குவாதம்: தேர்தல் அதிகாரிகள் சமாதானம்!
அமேதி: வாக்குச்சாவடியில் தாமரை சின்னம் இருந்ததாக தேர்தல் அதிகாரிகளிடம் ராகுல்காந்தி வாக்குவாதம் செய்தார். ஆனால், வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்த பள்ளியில் மாணவர்களுக்காக வரையப்பட்ட தாமரை உருவம் என்பது பிறகு தெரியவந்தது.
உத்தரபிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல்காந்தி போட்டியிடுகிறார். இன்றைய 8ம்கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் அமேதியும் ஒன்றாகும். எனவே தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு ராகுல்காந்தி விசிட் அடித்து வருகிறார்.
திலோயி சட்டசபை தொகுதிக்குட்பட்ட புலா என்ற கிராமத்திலுள்ள வாக்குப்பதிவு மையத்துக்கும் ராகுல் சென்றார். அப்போது வாக்குப்பதிவு மையத்தின் உள்ளே தாமரை உருவத்தை சாக்பீசால் வரைந்து வைத்துள்ளதை பார்த்து கோபமடைந்தார். பாஜகவின் சின்னமான தாமரையை வாக்குச்சாவடிக்குள் வரைய எப்படி அனுமதி கொடுத்தீர்கள் என்று ராகுல்காந்தி தேர்தல் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்க உள்ளதாகவும் கூறினார்.
ஆனால் வாக்குப்பதிவு மைய அதிகாரிளோ, அது கட்சியின் சின்னம் கிடையாது என்று ராகுலை சமாதானப்படுத்த முயன்றனர். ஒரு பள்ளியில் வைத்து வாக்குப்பதிவு நடந்துவருகிறது. இந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக கரும்பலகையில் ஆசிரியர் வரைந்த தாமரை சின்னம் இது. இதற்கும் தேர்தல் பிரச்சாரத்துக்கும் சம்மந்தம் இல்லை என்று கூறி ராகுல்காந்தியை சமாதானப்படுத்தி திருப்பியனுப்பினர் தேர்தல் அதிகாரிகள்.
இருப்பினும் தேர்தல் ஆணையத்தில் இதுகுறித்து காங்கிரஸ் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராகுல்காந்தி அமேதி தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிகளுக்கு தொடர்ந்து விசிட் அடித்து வருகிறார்.