2019ல் ஆட்சியமைக்க ஓட்டு போட்டால் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து... தொடங்கியது ராகுலின் வேட்டை!
2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வாக்களித்தால் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உறுதியளித்துள்ளார்.
டெல்லி : 2019 நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வாக்களித்தால் ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி டெல்லி ஜந்தர் மந்தரில் தெலுங்குதேசம் மற்றும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினரின் போராட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்றவர்கள் மத்தியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உரையாற்றினார்.
அப்போது அவர் "ஆந்திராவிற்கு நிச்சயம் சிறப்பு அந்தஸ்து தரப்படும். 2019ல் ஆட்சிக்கு வந்ததும் காங்கிரஸ் செய்யும் முதல் வேலை இதுவாகத் தான் இருக்கும் " என்று தெரிவித்துள்ளார்.
ராகுலின் அறிவுரை
எதிர்க்கட்சிகள் ஓரணியில் போராட வேண்டும். அப்படி செய்தால் இந்திய அரசு மற்றும் பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து ஆந்திர மக்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கோரிக்கையை நிறைவேற்ற முடியும் என்றும் ராகுல் கூறினார்.
காங்கிரஸ் துணை நிற்கும்
ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்ற வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஓரணியில் இருந்தால் பாஜகவிடம் இருந்து நீதியைப் பெற முடியும் என்று ராகுல் காந்தி ட்வீட்டியுள்ளார். இந்திய தேசிய காங்கிரஸ் ஆந்திராவுடன் இணைந்து நிற்கிறது என்ற ஹேஷ்டேகையும் ராகுல் பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து போராடும் எம்பிகள்
ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரி நாடாளுமன்றத்திலும் எம்பிகள் புயலை கிளப்பி வருகின்றனர். பாஜகவுடன் கூட்டணியில் இருந்தாலும் தெலுங்கு தேசம் கட்சி எம்பிகள் தொடர் அமளி, போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மத்திய அரசின் மீது அதிருப்தி
தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு மத்திய அரசு தந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பதால் கட்சியினருக்கு அளித்த உத்தரவின் படியே போராட்டங்கள் நடைபெற்று வருகின்றனர். ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து கோரும் போராட்டத்தில் பிற கட்சிகளின் ஆதரவையும் தெலுங்குதேசம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.