ராகுலின் ட்விட்டரில் ஐ.டி.,யில் பதிவிடுவது யார் - ரகசியத்தை வெளியிட்ட ராகுல் காந்தி
தமது ட்விட்டர் கணக்கில் பதிவுகளை வெளியிடுவது யார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி விளக்கம் அளித்திருக்கிறார்.
டெல்லி : தமது ட்விட்டரில் பக்கத்தில் பதிவிடுவது யார் என்கிற ரகசியத்தை வெளியிட்டிருக்கிறார் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி.
கடந்த சில மாதங்களாக அரசியல் களத்தில் பரபரப்பு காட்டிவருகிறார் ராகுல் காந்தி. தொடர் சுற்றுப்பயணங்கள், கூட்டங்கள் என மக்களை சந்தித்து வரும் ராகுல் குஜராத் தேர்தல் களத்திலும் அதிரடி காட்டி வருகிறார்.
அதுபோல தற்போது இளைய சமுதாயத்தின் முக்கிய சமூக வலைத்தளமான ட்விட்டரிலும் இறங்கி அடித்து வருகிறார் ராகுல். கடந்த இரு மாதத்தில் மட்டும் அவர் ட்வீட் போடும் ஸ்டைல், முக்கிய பிரச்னைகளை அணுகும் விதம், கேள்வி கேட்பவர்களுக்கு பதில் அளிப்பது, மற்ற கட்சியினரின் கிண்டல்களுக்கு பதில் சொல்வது என கலக்கி வருகிறார்.
பின் தொடர்வோர் எண்ணிக்கை
இதனால் அவரை ட்விட்டரில் பின் தொடர்வோரின் எண்ணிக்கை குறுகிய காலத்தில் பல மடங்கு ஏறி இருக்கிறது. இதை ராகுலின் செல்வாக்கு ஏறி இருப்பதையே உணர்த்துகிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். அதேசமயம் இது ராகுல் காந்தி அல்ல வேறு யாரே பதிவிடுகிறார்கள் என்று விமர்சனமும் எழுகின்றன.
விமர்சனம் குறித்து கிண்டல்
கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு குட்டி நாயோடு விளையாடும் வீடியோ ஒன்றைப் பகிர்ந்திருந்த ராகுல், இதன் பெயர் பிடி. எனக்குப் பதிலாக இது தான் ட்வீட் போடுகிறது என்று விளையாட்டாக பகடி செய்திருந்தார். இந்நிலையில் குஜராத்தில் நேற்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல், தனது ட்விட்டர் பக்கம் குறித்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.
பதிவிடுவது யார் ?
அதில் ட்விட்டர் மற்றும் சமூக வலைத்தள கணக்கை நிர்வகிக்க 3 பேர் அடங்கிய குழு இருந்தாலும், தான் சொல்லும் கருத்தை மேம்படுத்தி பதிவு செய்வதே அவர்களின் வேலை என்றும், அரசியல் கருத்துகள் முழுக்க முழுக்க தானே பதிவிடுவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
முன்னாள் நடிகை தலைமையில்...
மேலும் பிறந்தநாள் வாழ்த்து செய்திகள் மற்றும் சில முக்கிய நாட்கள் குறித்தான பதிவுகளை தனது அணி பதிவு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டார். புதிதாக சமூக வலைத்தளங்களை நிர்வகிக்க முன்னாள் எம்.பி.,யும் நடிகையுமான குத்து ரம்யா தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.