'சான்ஸே இல்ல'.. இமாச்சல் வெற்றிக்கு ராகுலின் யாத்திரையே காரணம்.. அடித்து சொல்லும் கார்கே
சிம்லா: இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்தி மேற்கொண்ட பாத யாத்திரையே காரணம் என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.
தேர்தல் நடைபெற்ற குஜராத், இமாச்சலப் பிரதேச மாநிலங்களில் ராகுல் காந்தி பாதயாத்திரையை இன்னும் தொடங்காத நிலையிலும், கார்கே இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
குஜராத்தில் வரலாறு காணாத தோல்வியை காங்கிரஸ் சந்தித்திருக்கும் நிலையில், அக்கட்சிக்கு சற்று ஆறுதலாக இமாச்சலப் பிரதேச வெற்றி அமைந்துள்ளது.
ராகுல் காந்தி VS பிரியங்கா.. சகோதரனை விஞ்சி சாதித்த 'சிங்கப்பெண்!' குஜராத், இமாச்சல் சொல்லும் பாடம்
இமயமலையில் காங்கிரஸ் கொடி
இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. மொத்தமுள்ள 68 தொகுதிகளில் காங்கிரஸ் 40 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆட்சியமைப்பதற்கு 35 இடங்களே போதுமான நிலையில், 40 தொகுதிகளை பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ளது. இதுவரை இமாச்சலில் ஒரு முறை ஆட்சியில் இருக்கும் கட்சி மறு முறை ஆட்சி அமைத்தது கிடையாது. இந்த தேர்தலிலும் அதுபோலவே பாஜக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு, காங்கிரஸுக்கு ஆட்சிக்கட்டிலை மக்கள் வழங்கியுள்ளனர்.
பிரியங்கா காந்தி வியூகம்
இமாச்சல் தேர்தலை பொறுத்தவரை ஆரம்பம் முதலாகவே காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வந்தார். வீதிவீதியாக சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டது முதல் வேட்பாளர்கள் தேர்வு வரை பிரியங்கா காந்தியின் கடின உழைப்பு இருந்தது. இதுதான் இமாச்சல் வெற்றிக்கு முதன்மைக் காரணமாக கூறப்படுகிறது. அதே சமயத்தில், குஜராத் தேர்தலில் காங்கிரஸ் தோற்றதற்கு ராகுல் காந்தியின் அலட்சியமே காரணம் என அக்கட்சியினரே கூறி வருகின்றனர்.
மல்லிகார்ஜுனே கார்கே பதில்
இந்நிலையில், இந்த தேர்தல் வெற்றி குறித்து மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "இமாச்சல் பிரதேச தேர்தலில் காங்கிரஸுக்கு அமோக வெற்றியை கொடுத்ததற்காக மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றப்படும். பாஜகவை நிராகரித்த இமாச்சல் மக்களின் மனநிலையில்தான் தற்போது நாட்டு மக்கள் உள்ளனர்.
"ராகுல் பாதயாத்திரையே காரணம்"
இமாச்சலில் இந்த தேர்தல் வெற்றிக்கு தொண்டர்கள், நிர்வாகிகள், மக்கள் என அனைத்து தரப்பினருமே காரணம். ஆனால், ராகுல் காந்தியின் பாதயாத்திரையே இமாச்சல் வெற்றிக்கு முக்கிய காரணமாக நான் கருதுகிறேன். அத்துடன், எங்களுக்கு சோனியா காந்தியின் ஆசீர்வாதமும் துணை இருந்தது. பிரியங்கா காந்தியின் பிரச்சாரமும் மக்களை வெகுவாக ஈர்த்தது" என கார்கே தெரிவித்தார். ராகுல் காந்தியின் பாதயாத்திரை இமாச்சலில் இன்னும் தொடங்கவில்லை. அதுபோல, அவர் இமாச்சலில் ஒருமுறை கூட பிரச்சாரத்துக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.