ராகுல் காரை தடுத்து நிறுத்தி அங்கன்வாடி பெண் ஊழியர்கள் போராட்டம்!
அமேதி: ஊதிய உயர்வு கேட்டு 150க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்கள் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி சென்ற காரை வழிமறித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில் இருந்து மக்களவைக்கு எம்.பி.,யாக ராகுல் காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் ராகுல் தனது தொகுதியில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
சுற்றுப்பயணத்தின் போது அவரை நேரில் சந்தித்து குறைகளை கூற முடியவில்லை என கோரி அத்தொகுதி மக்கள் சில இடங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மூன்றாம் நாளான நேற்று அவர் சென்ற காரை 150க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பெண் ஊழியர்கள் வழிமறித்தனர். தங்களுக்கு ஊதிய உயர்வு வழங்க கோரி அவர்கள் முழக்கமிட்டனர். அவர்கள் ராகுலை சந்தித்து தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்க வேண்டும் என கூறினர்.
ஆனால் ராகுல் உடன் வந்த போலீஸார் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இதனால், பெண் ஊழியர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இறுதியில் வேறுவழியில்லாமல் காரை விட்டு இறங்கிய ராகுல் அங்கிருந்த பெண் ஊழியர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர் தேவையான நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததால் பெண் ஊழியர்கள் கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.